உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / மாணவிக்கு பாலியல் தொல்லை ஆட்டோ டிரைவர் மீது வழக்கு

மாணவிக்கு பாலியல் தொல்லை ஆட்டோ டிரைவர் மீது வழக்கு

புட்டேனஹள்ளி: கல்லுாரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த, 'ரேபிடோ' ஆட்டோ ஓட்டுநர் மீது வழக்குப் பதிவாகி உள்ளது. பெங்களூரு, புட்டேனஹள்ளியில் வசிப்பவர் 19 வயது இளம்பெண். கல்லுாரி மாணவியான இவர், கடந்த 8ம் தேதி கல்லுாரியில் இருந்து வீட்டிற்குச் செல்ல, 'ரேபிடோ' ஆட்டோவில் முன்பதிவு செய்தார். கல்லுாரியில் இருந்து மாணவியை 'பிக் அப்' செய்த ஆட்டோ ஓட்டுநர் ஹனுமந்தப்பா தல்வார், 24, வீட்டின் முன் இறக்கிவிட்டார். மாணவியிடம் நைசாக பேச்சு கொடுத்த ஹனுமந்தப்பா, 'சினிமா நடிகை போன்று அழகாக உள்ளாய்; ஏன் உன் முகம் வாடி உள்ளது, உடல்நிலை சரியில்லையா?' என்று கேட்டு, மாணவியின் நெற்றியை தொட்டார். கோபம் அடைந்த மாணவி, கையை எடுக்கும்படி கூறி உள்ளார். ஆனாலும், மாணவியின் உடல் உறுப்புகளை தொட்டு, ஹனுமந்தப்பா பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அதிர்ச்சி அடைந்த மாணவி, அங்கிருந்து சென்றுவிட்டார். நடந்தது பற்றி வீட்டில் எதுவும் கூறவில்லை. தன் தோழியிடம் கூறியபோது, ஆட்டோ ஓட்டுநர் மீது புகார் அளிக்கும்படி அறிவுரை கூறினார். இதையடுத்து, நேற்று முன்தினம் புட்டேனஹள்ளி போலீசில் ஹனுமந்தப்பா மீது, மாணவி புகார் செய்தார். ஆட்டோ பதிவெண், ஹனுமந்தப்பாவின் மொபைல் நம்பரையும் கொடுத்துள்ளார். ஹனுமந்தப்பா மீது வழக்குப் பதிவு செய்த போலீசார் அவரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி