பேத்தமங்களா ஏரியில் படகு சவாரி சுற்றுலா தலமாக்க கலெக்டர் திட்டம்
தங்கவயல்: படகு சவாரியுடன் பேத்தமங்களா ஏரியை சுற்றுலா தலமாக்கவும், தங்கவயலுக்கு தட்டுப்பாடு இல்லாமல் குடிநீர் வழங்கவும் அதிகாரிகளுடன் பரிசீலனை செய்வதாக கோலார் கலெக்டர் எம்.ஆர்.ரவி தெரிவித்தார். பேத்தமங்களா ஏரியை நேற்று கோலார் கலெக்டர் எம்.ஆர்.ரவி பார்வையிட்டார். 13 நாட்களாக மறுகால் பாயும் நீரை கண்டதும், “ஏரியை சுற்றுலா தலமாக்க எல்லா தகுதியும் வசதிகளும் உள்ளன. படகு சவாரிக்கும் ஏற்பாடு செய்யலாமே?” என்றார். அங்கு இருந்த கலெக்டரிடம் பொதுமக்கள் கூறியது: தங்கச் சுரங்க தொழிலாளர் குடியிருப்பு பகுதிகளுக்கு 24 ஆண்டுகளாக குடிநீர் வினியோகிக்கப்படவில்லை. சுரங்க குடியிருப்பு பகுதிகளுக்கு 1904ம் ஆண்டே பேத்தமங்களா ஏரி நீரை சுத்திகரிப்பு செய்து வினியோகிக்கப்பட்டது. 2001ல் தங்கச் சுரங்கம் மூடப்பட்ட பின்னர், சுரங்க தொழிலாளர் குடியிருப்பு பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டது. இதனால் சுரங்க குடியிருப்பு பகுதிகளான நகராட்சிக்கு உட்பட்ட 16 வார்டுகள், 2 பெமல் நகர் வார்டுகளுக்கு சுத்திகரிப்பு செய்த பேத்தமங்களா குடிநீர் கிடைக்கவில்லை. இதனால் ஆழ்துளைக் கிணற்று நீரையே நம்பியிருக்கின்றனர். சுத்திகரிப்பு செய்யாத ஆழ்துளைக் கிணற்று நீரை 3 குடம் 10 ரூபாய்க்கு வாங்கி பயன்படுத்துகின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர். இதை கேட்டதும், குடிநீர் வாரிய அதிகாரிகளிடம், “அங்குள்ள மக்கள் தண்ணீர் கேட்கவில்லை என்பதால் குடிநீரை வழங்காமல் விட்டு விடுவதா? குடிநீர் வாரியம் என்ன செய்துகொண்டிருக்கிறது? 'அம்ருத் சிட்டி' திட்டத்தில் தண்ணீர் சப்ளை செய்யும் திட்டம் என்ன ஆனது?” என சரமாரியாக கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த குடிநீர் வாரிய அதிகாரி, 'தங்கவயலுக்கும் பேத்தமங்களாவுக்கும் இடையே புதிய இரும்பு குழாய்கள் பதிக்கும் வேலை 2023ல் முடிவடைய வேண்டும்; இன்னும் முடியவில்லை. இன்னும் 5 கி.மீ., துாரம் பதிக்க வேண்டியுள்ளது. நீர் தேக்க இரண்டு மேல்நிலைத் தொட்டிகள் அமைக்கும் பணியும் மேற்கொள்ள வேண்டும்,” என்றார். குறுக்கிட்ட மாவட்ட கலெக்டர், “பேத்தமங்களா தண்ணீரை வீணாக்காமல் தங்கவயலுக்கு குடிநீர் வழங்க வேண்டும். இது தொடர்பாக, குடிநீர் வாரிய அதிகாரிகள் பங்கேற்கும் கூட்டத்தை கோலார் மாவட்ட நிர்வாக அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்படும். தங்கவயலுக்கு தட்டுப்பாடு இல்லாமல் தண்ணீர் கிடைக்க முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்,” என்றார்.
பொதுமக்கள் புலம்பல்
பேத்தமங்களாவில் இருந்து 14 கி.மீ., தொலைவில் உள்ள தங்கவயலுக்கு குடிநீர் வினியோகிக்க புதிய இரும்பு குழாய்கள் பதிக்க திட்டமிடப்பட்டது. மத்திய அரசின் 'அம்ருத் சிட்டி' திட்டத்தில், 53.60 கோடி ரூபாயில் 2017ல் பணிகள் தொடங்கி, 2019ல் முடித்திருக்க வேண்டும். பல முறை கெடு நீட்டிக்கப்பட்டு, இன்னும் இழுபறியாகவே உள்ளது. தவிர ஏரியின் இரு மதகுகள் பழுதடைந்த நிலையில் உள்ளன. சாக்குப்போக்கு சொல்லி தங்கவயலுக்கு 24 ஆண்டுகளாக பேத்தமங்களா குடிநீர் வினியோக்கப்படாமல் இருந்து வருகிறது. இப்போது தான் மாவட்ட கலெக்டர் எம்.ஆர்.ரவி கவனத்திற்கே சென்றுள்ளதா என, பொதுமக்கள் புலம்புகின்றனர்.