ரூ.1.50 கோடி போதை பறிமுதல்
பெங்களூரு : பெங்களூரில் 1.50 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. நைஜீரிய பெண் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர். பெங்களூரு போலீஸ் கமிஷனர் சீமந்த்குமார் சிங் நேற்று அளித்த பேட்டி: போதைப் பொருள் விற்பனை செய்து வந்த தியாகராஜநகரின் ஸ்ரேயாஸ், 23, அஸ்வத்நகரின் ரக் ஷித், 24 ஆகியோரை பெங்களூரு குமாரசாமி லே - அவுட் போலீசார் கைது செய்தனர். இவர்கள் இருவரும் கல்லுாரி மாணவர்களுக்கு போதைப் பொருள் விற்பனை செய்து வந்துள்ளனர். கிடைக்கும் பணத்தை ஆடம்பரமாக செலவு செய்துள்ளனர். இதுபோன்று ஆவலஹள்ளி போலீசார் போதைப் பொருள் விற்ற, நைஜீரியாவின் ஆஸ்பென்சோ மரேம் மேர், 35, என்ற பெண்ணை கைது செய்தனர். இவரிடம் இருந்து இரண்டு லட்சம் ரூபாய் மதிப்புள்ள கோகைன் பறிமுதல் செய்யப்பட்டது. கடந்த ஆண்டு மருத்துவ விசாவில், பெங்களூரு வந்தார். நைஜீரிய நபர்களிடம் இருந்து குறைந்து விலைக்கு, போதைப் பொருள் வாங்கி, அதிக விலைக்கு விற்று வந்தார். ஹைட்ரோ கஞ்சா விற்றதாக லும்பினி கார்டனை சேர்ந்த லோகேஷ் திம்மப்பா, 30, என்பவரை, அம்ருதஹள்ளி போலீசார் கைது செய்தனர். கஞ்சா விற்ற கேரளாவின் ரெஹான் மாங்காட்டில், 35, என்பவரை ஹெப்பகோடி போலீசார் கைது செய்தனர். இவர்களை தவிர போதைப் பொருள் விற்ற மேலும் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மொத்தம் 9 பேரை கைது செய்துள்ள போலீசார், 506 கிராம் எம்.டி.எம்.ஏ., படிகம், 50 எல்.எஸ்.டி., துண்டுகள், 85 கிராம் கோகைன், 56 கிராம் ஹைட்ரோ கஞ்சா ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதன்மதிப்பு 1.50 கோடி ரூபாய். இவ்வாறு கூறினார். பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருட்களை, சீமந்த்குமார் சிங் பார்வையிட்டார்.