பைக்கில் சென்றவரை தாக்கி கொன்ற யானை
சாம்ராஜ் நகர்: சாம்ராஜ் நகர் மாவட்டம், ஹனுாரின் கொம்பேகள்ளு கிராமத்தை சேர்ந்தவர்கள் கதே கவுடா, 66, கொல்லா வீரகவுடா. இருவரும் பைக்கில் நேற்று ஒடயேர் பாளையாவுக்கு சென்று கொண்டிருந்தனர். நெல்லிகத்ரி அருகே சென்றபோது, திடீரென வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த யானை, இவர்களை தாக்கியது. கீழே விழுந்து எழுந்து ஓடிய கதே கவுடாவை யானை விரட்டியது. அவரை மிதித்துக் கொன்றது. கொல்லா வீரகவுடா, அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். தகவல் அறிந்த வனத்துறை அதிகாரி ஸ்ரீபாதி, ஊழியர்கள் அங்கு விரைந்தனர். கதே கவுடாவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதிகாரி ஸ்ரீபாதி கூறுகையில், ''யானை தாக்குதலில் உயிரிழந்த கதே கவுடாவுக்கு முதல்கட்டமாக 5 லட்சம் ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 15 லட்சம் ரூபாய், பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பின், வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.