பெங்களூரு: சிக்பேட் தொகுதி, காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ., - ஆர்.வி.தேவராஜ், 67, மாரடைப்பால் நேற்று காலமானார். கர்நாடக அரசு போக்குவரத்து கழகம், பி.எம்.டி.சி., போக்குவரத்து கழகம் போன்றவற்றின் தலைவராக பதவி வகித்தவர். பெங்களூரு மாவட்ட காங்கிரசில் செல்வாக்கு மிக்க தலைவராக விளங்கியவர் தேவராஜ். மைசூரில் உள்ள சாமுண்டி மலைக்கு சுவாமி கும்பிட சென்றிருந்த போது, மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அவரை, மைசூரில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதித்தனர். பின், மைசூரில் உள்ள ஜெயதேவா இதய மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது வழியிலேயே இறந்தார். பெங்களூரு கே.ஆர்.மார்க்கெட் பகுதியில் உள்ள அவரது வீட்டிலும், பின்னர், ஜே.சி.சாலையில் உள்ள அவரது அலுவலகத்திலும், அவரது உடலுக்கு பலரும் அஞ்சலி செலுத்தினர். துணை முதல்வர் டி.கே.சிவகுமார், அமைச்சர் பரமேஸ்வர் உட்பட காங்கிரசாரும், எதிர்க்கட்சி தலைவரான ஆர்.அசோக், சிக்பேட் பா.ஜ., மண்டல தலைவர் தன்ராஜ் உட்பட பா.ஜ.,வினரும் அஞ்சலி செலுத்தினர் . சிட்டி மார்க்கெட் ஆனந்தபுரம் காங்கிரஸ் மூத்த தலைவர் பாலகிருஷ்ணன் கூறுகையில், ''குடிசைப்பகுதி தமிழர்களின் குறை தீர்ப்பதில் மிகுந்த அக்கறை காட்டியவர். சிக்பேட் தொகுதியில் உள்ள தமிழர்களுக்கும், கலாசிபாளையம், சிட்டி மார்க்கெட் சிறு வியாபாரிகள், கூலித் தொழிலாளர்களுக்கும் ஆதரவாக இருந்தவர் தேவராஜ்,'' என்றார். இன்று பெங்களூரு கனகபுரா சாலையில் இறுதி சடங்கு நடக்கிறது.