காதலிக்க மறுத்ததால் கடத்தப்பட்ட சிறுமி பைக் விபத்தில் பரிதாப பலி
ஹொஸ்கோட்: காதலிக்க மறுத்ததால் பைக்கில் கடத்தப்பட்ட சிறுமி, விபத்தில் சிக்கி உயிரிழந்தார். சிறுவன் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். பெங்களூரு, பன்னர்கட்டாவை சேர்ந்தவர் அஜய், 24. இவர், தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுமியை ஒருதலையாக காதலித்தார். தன் காதலை பலமுறை வெளிப்படுத்தியும், சிறுமி ஏற்றுக் கொள்ளவில்லை. கடந்த 24ம் தேதி மாலை பள்ளி முடிந்து, சிறுமி வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அஜய், அவரது நண்பர்கள் இர்பான், 22, முபாரக், 23 மற்றும், 17 வயது சிறுவன் ஆகியோர் இரு பைக்குகளில் வந்தனர். சிறுமியை வலுக்கட்டாயமாக அஜய் தன் பைக்கில் ஏற்றினார். அஜய் பைக்கை ஓட்டினார். சிறுமியை நடுவில் அமர வைத்தனர். முபாரக் பின்னால் அமர்ந்திருந்தார். பெங்களூரு ரூரல் ஹொஸ்கோட் நோக்கிச் சென்றனர். வழியில் அஜய் கட்டுப்பாட்டை இழந்த பைக், சாலை தடுப்பு சுவரில் மோதியது. பைக்கில் இருந்து மூன்று பேரும் விழுந்தனர். தலையில் பலத்த காயம் அடைந்த சிறுமி உயிரிழந்தார். இதை பார்த்து மற்றவர்கள் தப்பினர். கடத்தல், விபத்து ஆகிய இரு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த ஹொஸ்கோட் போலீசார், அஜய், முபாரக், இர்பான், 17 வயது சிறுவன் ஆகிய நான்கு பேரையும் நேற்று முன்தினம் கைது செய்தனர். விசாரணை நடக்கிறது.