உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  வீட்டில் நாய்கள் வளர்ப்போருக்கு ஜி.பி.ஏ., புதிய விதிகள் அமல்

 வீட்டில் நாய்கள் வளர்ப்போருக்கு ஜி.பி.ஏ., புதிய விதிகள் அமல்

பெங்களூரு: வீடுகளில் நாய்களை வளர்ப்போருக்கு, 'கிரேட்டர் பெங்களூரு' ஆணையம் புதிய விதிகளை அமல்படுத்தி உள்ளது. பெங்களூரு உட்பட மாநிலத்தின் பல பகுதிகளில் தெரு நாய்கள் தாக்கியதில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயம் அடைந்தனர். இரண்டு வாரங்களுக்கு முன், எச்.எஸ்.ஆர்., லே - அவுட்டில் ஷாலினி என்பவர் காலை நடைபயிற்சி மேற்கொண்டு விட்டு, தன் வீட்டி ன் அருகில் வந்தார். அப்போது அவரின் எதிர்வீட்டில் வளர்க்கும் 'ரா ட்வீலர்' நாய், இவர் மீது பாய்ந்து, முகம், கழுத்து, தலை என குடித்து குதறியது. இவரின் அலறலை கேட்ட நாய் உரிமையாளர், நாயை பிடித்து வீட்டிற்குள் அழைத்து சென்றார். படுகாயம் அடைந்த ஷாலினி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு 80க்கும் மேற்பட்ட தையல் போடப்பட்டது. ஒரு வாரத்துக்கு பின், தலைமறைவாக இருந்த நாயின் உரிமையாளர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், ஜி.பி.ஏ., எனும் கிரேட்டர் பெங்களூரு ஆணையம், புதிய விதிகளை அமல்படுத்தி உள்ளது. அதில் குறிப்பிட்டு உள்ளதாவது:  வீட்டில் நாய்களை வளர்க்க ஜி.பி.ஏ.,விடம் உரிமம் பெற வேண்டும். இந்த உரிமத்தை ஆண்டுதோறும் புதுப்பிக்க, ஜி.பி.ஏ.,விடம் பணம் செலுத்த வேண்டும். நாய்களின் இனம் அடிப்படையில் உரிமங்களுக்கான கட்டணம் நிர்ணயம் செய்யப்படும்  ஜி.பி.ஏ.,வால் நியமிக்கப்பட்ட கால்நடை அதிகாரியிடம் சான்றிதழ் பெற வேண்டும். நாய் உரிமையாளர்கள் தங்கள் சொந்த செலவில் நாய்களுக்கு மைக்ரோசிப் பொருத்த வேண்டும். நாயும், அதன் உரிமையாளரும் ரேபிஸ் தடுப்பூசி போட வேண்டும்  பதிவு செய்யப்பட்ட கால்நடை மருத்துவரிடம் தடுப்பூசி போட்டதை உறுதிப்படுத்தி கொள்ள வேண்டும். வீட்டில் 12 மாதங்களுக்கு மேலான நாய்களுக்கு கருத்தடை செய்ய வேண்டும்  நாய்கள் தங்கும் இடம் சுத்தமாக இருக்க வேண்டும். அண்டை வீட்டினருக்கு தொந்தரவு ஏற்படாத வகையில் நாயை வளர்க்க வேண்டும்  ஒரு வீட்டில் மூன்று நாய்களுக்கு மேல் அனுமதி இல்லை. மூன்று நாய்களுக்கு மேல் இருந்தால், அவற்றை அதிகாரிகள் கைப்பற்றி, காப்பகத்திற்கு அனுப்பிவிடுவர்  மாநகராட்சி விதிகள்படி நாய்களை வளர்க்க வேண்டும். செல்ல நாய்களை நடைபயிற்சிக்கு அழைத்து செல்லும்போது, நாயின் கழுத்தில் கயிறு அல்லது சங்கலியால் கட்ட வேண்டும். நடைபயிற்சியின் போது நாய் அசுத்தம் ஏற்படுத்தினால், அதனை நாய் உரிமையாளரே சுத்தம் செய்ய வேண்டும்  வீட்டில் இருந்து வெளியே சென்று, மாநகராட்சி அதிகாரிகளால் பிடிபட்டால், 72 மணி நேரத்துக்குள் 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். மூன்று நாட்களுக்கு மேல் ஒவ்வொரு நாளும் 200 ரூபாய் கூடுதலாக செலுத்த வேண்டும். இவ்வாறு பிடிபடும் நாய்களை வாங்க வரவில்லை என்றால், நாய்கள் மீட்பு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும்  அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகளில் அதிக கோபம் அடையும் நாய்கள் வைத்திருக்க தடை செய்யப்பட்டு உள்ளது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ