சிறுமி சிகிச்சை பணத்துக்காக வீடு வீடாக கையேந்திய பெரியம்மா
மைசூரு: விபத்தில் காயமடைந்த சிறுமியின் சிகிச்சைக்கு பணம் இல்லாததால், சிறுமியின் பெரியம்மா, கிராமத்தினரிடம் மடிபிச்சை ஏந்தினார். ஆனாலும் சிறுமி உயிரிழந்தார். மைசூரு மாவட்டம், நஞ்சன்கூடு தாலுகாவில் வசிப்பவர் மகேஷ். சில நாட்களுக்கு முன்பு தன் மனைவி ராணி, மகள் ஆத்யா, 5, ஆகியோருடன், மகேஷ் பைக்கில் சென்று கொண்டிருந்தார். பதனகாளு அருகில் சென்றபோது, பைக் கட்டுப்பாட்டை இழந்து மோதியது. பலத்த காயமடைந்த ஆத்யா, மைசூரின் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை செலவு 1.5 லட்சம் ரூபாய் ஆனது. பணம் இல்லாததால், சிறுமியின் பெரியம்மா மங்களம்மா, தன் கிராமத்துக்கு சென்று, வீடு வீடாக மடியேந்தி பிச்சை எடுத்தார். 80,000 ரூபாய் வசூலானது. மங்களம்மா பிச்சை எடுக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் பரவியதும், தனியார் மருத்துவமனை நிர்வாகம் பில் தொகையை 25,000 ரூபாயாக குறைத்துக் கொண்டது. இதன்பின் சிறுமி கே.ஆர்.மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி, சிறுமி நேற்று உயிரிழந்தார்.