பெங்., மாநகராட்சி மத்திய அலுவலக வளாகத்தில் உயர்தரமான ஹோட்டல்
பெங்களூரு : பெங்களூரு மாநகராட்சி மத்திய அலுவலகத்தில், ஸ்டார் ஹோட்டல் போன்று, உயர்தரமான ஹோட்டல் கட்ட திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. விரைவில் பணிகள் துவங்கப்படவுள்ளன. பெங்களூரு மாநகராட்சியின் மத்திய அலுவலகத்தில், நுாற்றுக்கணக்கான அதிகாரிகள், ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். தினமும் ஏதாவது ஒரு பணிக்காக, ஆயிரக்கணக்கான பொது மக்கள், மாநகராட்சி அலுவலகத்துக்கு வருகின்றனர். இவர்களுக்கு நல்ல உணவு கிடைக்க வேண்டும். எனவே ஸ்டார் ஹோட்டல் போன்று, தரமான ஹோட்டல் கட்டும்படி, மாநகராட்சி ஊழியர்கள் சங்கத்தினர் வேண்டுகோள் விடுத்தனர். இதை ஏற்றுக்கொண்ட மாநகராட்சி, மத்திய அலுலகத்தில் ஹோட்டல் கட்ட திட்டமிட்டுள்ளது. விரைவில் பணிகள் துவக்கப்படும். இது குறித்து, மாநகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் சங்க தலைவர் அம்ருத்ராஜ் கூறியதாவது: பெங்களூரு மாநகராட்சி அலுவலகம் மற்றும் அநன் சுற்றுப்பகுதிகளில் தனியார் ஹோட்டல்கள் உள்ளன. இப்போது மாநகராட்சி சார்பிலேயே ஹோட்டல் கட்டப்பட உள்ளது. இதற்கு தலைமை கமிஷனர் ஒப்புதல் அளித்துள்ளார். மத்திய அலுவலக வளாகத்தில், ஸ்டார் ஹோட்டல் போன்றே, ரெஸ்டாரென்ட் கட்டப்படும். எவ்வளவு செலவிடப்படும், ஹோட்டலின் வடிவம் குறித்து, வரும் நாட்களில் தகவல் வெளியாகும். இங்கு ஹோட்டல் கட்டப்பட்டால், ஆயிரக்கணக்கானோருக்கு உதவியாக இருக்கும். இவ்வாறு கூறினார்.