கவர்னரை அவமதித்த சம்பவம்: சட்டசபையில் இன்று விவாதம்
பெங்களூரு: சட்டசபையில் கவர்னரை அவமதித்த, காங்கிரஸ் உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுப்பது பற்றி, இன்று விவாதம் நடக்க உள்ளது. இந்த ஆண்டிற்கான முதல் சட்டசபை கூட்டத்தொடர், பெங்களூரு விதான் சவுதாவில் நேற்று துவங்கியது. அரசு தயாரித்து கொடுத்த உரையை வாசிக்காமல், வெளிநடப்பு செய்த கவர்னருக்கு முன்பு, காங்கிரஸ் உறுப்பினர்கள் கோஷம் எழுப்பினர். சிறிது நேரம் அவை ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் சட்டசபை கூடிய போது, முன்னாள் எம்.எல்.ஏ., பீமண்ணா கன்ட்ரே மரணத்திற்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானத்தை, சட்ட அமைச்சர் எச்.கே.பாட்டீல் கொண்டு வந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பா.ஜ., உறுப்பினர்கள், கவர்னரை அவமதித்தது குறித்து முதலில் விவாதிக்க வேண்டும் என்று குரல் எழுப்பினர். ஆனால் எதையும் கண்டுகொள்ளாமல், இரங்கல் தீர்மானத்தை சபாநாயகர் காதர் வாசிக்க ஆரம்பித்தார். கோபம் அடைந்த பா.ஜ., உறுப்பினர்கள், சபாநாயகருக்கு எதிராக கோஷம் எழுப்பினர். 'உங்களுக்கு அமைச்சர் பதவி கிடைக்க வேண்டும் என்பதற்காக, சபாநாயகர் நாற்காலியில் அமர்ந்து, ஒரு தரப்புக்கு ஆதரவாக செயல்படாதீர்கள்' என்று, பா.ஜ., உறுப்பினர் சுனில் குமார் கூறினார். 'கடலோர பகுதியில் இருந்து வந்த சபாநாயகர், அப்பகுதி மக்களை அவமதிக்கும் வகையில் செயல்படுகிறார்' என, பா.ஜ., உறுப்பினர் வேதவியாஸ் காமத் அதிருப்தியை வெளிப்படுத்தினார். இதனால் கடுப்பான சபாநாயகர், 'மரணம் அடைந்தவருக்கு இரங்கல் கூட தெரிவிக்க கூடாதா' என, கோபமாக கேட்டார். மீண்டும் பேசிய பா.ஜ., உறுப்பினர் சுனில்குமார், 'காங்கிரசுக்கு தேசிய கொடி மீது அக்கறை இல்லை. அப்படி இருந்திருந்தால் தார்வாடில் தேசிய கொடி ஏற்ற விடாமல் தடுத்து இருப்பரா' என்று கேட்டார். 'ஆர்.எஸ்.எஸ்., அலுவலகத்தில் ஏன் தேசிய கொடி ஏற்றப்படுவது இல்லை' என்று, அமைச்சர் பிரியங்க் கார்கே கேள்வி எழுப்பினார். இதற்கு பா.ஜ., உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். காங்கிரஸ் உறுப்பினர்களும் குரலை உயர்த்தி பேசியதால், அவையில் கடும் கூச்சல், குழப்பம் நிலவியது. யார் என்ன பேசுகின்றனர் என்றே புரியவில்லை. இறுதியில் அனைவரையும் சமாதானப்படுத்திய சபாநாயகர், கவர்னரை அவமதித்த உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுப்பது பற்றி, நாளை(இன்று) விவாதிக்கலாம் என்று கூறினார். இதற்கு எதிர்க்கட்சியினர் ஒப்பு கொண்டனர். தொடர்ந்து, இரங்கல் தெரிவிக்கும் தீர்மானம் மீது, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசினர்.