20 வாகனங்கள் மீது மோதி விபத்து ஏற்படுத்திய லாரி
சர்ஜாபூர்: தறிகெட்டு ஓடிய கன்டெய்னர் லாரி, 20 வாகனங்கள் மீது மோதியது. இதில் பலர் காயம் அடைந்தனர். பெங்களூரு ஆனேக்கல் அருகே பெஸ்தமனஹள்ளியில் இருந்து சந்தாபூருக்கு நேற்று மதியம் கன்டெய்னர் லாரி சென்றது. திடீரென டிரைவர் கட்டுப்பாட்டை இழந்த லாரி தறிகெட்டு ஓடியது. சாலையில் சென்ற ஆட்டோ, கார், பைக் என 20க்கும் மேற்பட்ட வாகனங்கள் மீது லாரி மோதியது. ஆனாலும் டிரைவர், லாரியை நிறுத்தவில்லை. தகவல் அறிந்த ஆனேக்கல் போலீசார் தங்கள் வாகனத்தில் லாரியை பின்தொடர்ந்து சென்றனர். பொதுமக்களும் பைக்கில் துரத்தினர். சந்தாபூர் அருகே சென்ற போது, லாரியை, போலீசார் மடக்கினர். லாரி கண்ணாடி மீது கல்வீசிய பொதுமக்கள், டிரைவரை பிடித்து வெளியே இழுத்து தாக்கினர். அவரை போலீசார் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். விபத்தில் காயம் அடைந்த பெண் உட்பட 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். டிரைவர் மதுபோதையில் லாரியை ஓட்டி இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்து உள்ளது. அவருக்கு மருத்துவம பரிசோதனை நடத்தப்பட்டு உள்ளது.