அண்ணன் மகளுக்கு காதல் தொல்லை: வாலிபரை கத்தியால் குத்தியவர் கைது
ஹூப்பள்ளி : மகளை காதலித்த இளைஞரை, கத்தியால் குத்திய சித்தப்பா கைது செய்யப்பட்டார். ஹூப்பள்ளி நகரில் வசிப்பவர் கவுஸ் மொஹனிதீன், 24. இவர் இதே பகுதியில் வசிக்கும் 20 வயது இளம்பெண்ணை காதலித்தார். தன் காதலை கூறியபோது, தனக்கு விருப்பம் இல்லை என, அப்பெண் மறுத்துவிட்டார். எச்சரித்தும் அனுப்பினார். ஆனால் தன்னை காதலிக்கும்படி, கவுஸ் மொஹனிதீன் விடாமல் பெண்ணுக்கு தொந்தரவு கொடுத்தார். தினமும் பின் தொடர்ந்ததால், வெறுப்படைந்த இளம்பெண், தன் சித்தப்பா வாசிமிடம் கூறினார். கோபமடைந்த அவர், கவுஸ் மொஹனிதீனை வீட்டுக்கு வரவழைக்கும்படி மகளிடம் கூறினார். மகளும் நேற்று காலை கவுஸ் மொஹனிதீனை மொபைல் போனில் தொடர்பு கொண்டு, வீட்டுக்கு வரும்படி அழைத்தார். தன் காதலை கூறவே, அழைத்திருக்கலாம் என, குஷியாக இளம்பெண்ணின் வீட்டுக்கு சென்றார். அவர் வீட்டுக்குள் நுழைந்தவுடன், இளம்பெண்ணின் சித்தப்பா வாசிம், கவுஸ் மொஹனிதீனை பிடித்து இழுத்து, கத்தியால் குத்தினார். அவர் எப்படியோ வாசிம் பிடியில் இருந்து தப்பி, மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெறுகிறார். தகவலறிந்து அங்கு வந்த கசபா போலீசார், வாசிமை கைது செய்தனர். இளம்பெண்ணிடமும் விசாரணை நடத்துகின்றனர்.