உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / பிரான்சில் பட்டம் திருவிழா மங்களூரு குழுவினர் தயார்

பிரான்சில் பட்டம் திருவிழா மங்களூரு குழுவினர் தயார்

மங்களூரு: பிரான்சில் பட்டம் விடும் பிரமாண்ட திருவிழாவில் பங்கேற்க, மங்களூரு குழுவினர் தயாராகின்றனர். இதற்காக பலவிதமான பட்டங்களை தயாரித்துள்ளனர். பிரான்சில் வரும் செப்டம்பர் 13ம் தேதியன்று, சர்வதேச பட்டம் விடும் திருவிழா நடக்கவுள்ளது. இது உலகிலேயே மிகப்பெரிய பட்டம் விடும் திருவிழாவாகும். இதில் பங்கேற்க, தட்சிண கன்னடா மாவட்டம், மங்களூரை சேர்ந்த குழுவினர் தயாராகின்றனர். சர்வேஷ் ராவ் தலைமையிலான குழுவினர், பிரான்ஸ் செல்கின்றனர். இத்திருவிழாவில் பங்கேற்க, இக்குழுவினர் துணியால் ரதம் போன்ற பட்டத்தை வடிவமைத்துள்ளனர். 18 அடி உயரம், 10 அடி அகலமான பட்ட வடிவத்தை, கலைஞர் தினேஷ் ஹொள்ளா தயாரித்துள்ளார். இவருக்கு பிரானேஷ் குத்ரோலி, சதீஷ் ராவ், அருண் உதவினர். இதை சர்வேஷ் ராவ் தைத்துள்ளார். தண்ணீரின் மகத்துவத்தை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், புதிய பட்டத்தை வடிவமைத்துள்ளனர். பிரான்சில் செப்டம்பர் 13ம் தேதி துவங்கும் பட்டம் விடும் திருவிழா, 21ம் தேதி வரை நடக்கவுள்ளது. இதில் சர்வேஷ் ராவ் குழுவினர் பங்கேற்பது, ஒன்பதாவது முறை. இம்முறை குழுவில் ஐந்து பேர், புதிதாக சேர்ந்துள்ளனர். மங்களூரின், அசோக் நகரில் உள்ள, சர்வேஷ் ராவ் இல்லத்தில், பட்டம் தயாரிக்கும் பணிகள் மும்முரமாக நடக்கின்றன. இக்குழுவினர் ஏற்கனவே பிரான்ஸ், இங்கிலாந்து, இத்தாலி, கொரியா, ஹாங்காங், இந்தோனேஷியா, கத்தார், துபாய், இலங்கை உட்பட, 12 நாடுகளில் நடந்த பட்டம் விடும் திருவிழாவில் பங்கேற்றுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !