பணம் கொள்ளையடிக்கவே திட்டம் எம்.எல்.சி., விஸ்வநாத் குற்றச்சாட்டு
மைசூரு “மைசூருக்கு புதிய திட்டங்களை அறிவித்ததன் பின்னணியில், பணத்தை கொள்ளையடிக்கும் நோக்கம் உள்ளது,” என, பா.ஜ., - எம்.எல்.சி., விஸ்வநாத் குற்றஞ்சாட்டினார்.மைசூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:சாம்ராஜ் நகர் மாவட்டத்தின், மலை மஹாதேஸ்வரா மலையில், முதல்வர் சித்தராமையா நேற்று முன் தினம் அமைச்சரவை கூட்டம் நடத்தினார். இதற்கு முன்பு எடியூரப்பா, சித்தராமையா, வெளி மாவட்டங்களில் அமைச்சரவை கூட்டம் நடத்தினர். எந்த பயனும் ஏற்பட வில்லை.வெளிமாவட்டங்களில் அமைச்சரவை கூட்டம் நடத்துவதால், பணம் வீணாகும். காவிரி ஆரத்தி நிகழ்ச்சிக்கு, 93 கோடி ரூபாய் கொடுப்பதாக, அரசு கூறியுள்ளது. ஆனால் கே.ஆர்.எஸ்., இதற்கு முன்பு இருந்ததை போன்று, இப்போதும் உள்ளதா?திட்டங்களுக்கு பணம் கொடுத்தால், அதிகாரிகள் தவறாக பயன்படுத்துகின்றனர். கே.ஆர்.எஸ்.,அணையை நீர்ப்பாசனத்துறையிடம் இருந்து,சுற்றுலாத்துறைக்கு மாற்ற வேண்டும்.மைசூருக்கு ஒயிட் டாப்பிங் திட்டத்தை அறிவித்துள்ளனர். இந்த திட்டம் பணத்தை கொள்ளையடிக்க, எம்.எல்.ஏ.,க்களுக்கு வாய்ப்பு ஏற்படுத்தித் தரும் நோக்கில் அறிவிக்கப்பட்டுள்ளது.கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்கும் திட்டம் வரவேற்கத்தக்கது. மைசூரில் கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்க வேண்டும் என்பது, பல ஆண்டு கோரிக்கையாகும். விளையாட்டு மேம்பாட்டுக்கு உதவும்.சுற்றுலாத்துறையை மேம்படுத்த விளையாட்டு மிகவும் முக்கியம். கோடிக்கணக்கான மக்கள் கிரிக்கெட்டை பார்க்கின்றனர். 26 ஏக்கர் நிலம் கொடுத்து, விரைவில் ஸ்டேடியம் அமைக்க வேண்டும்.இஸ்லாமிய நாடுகள் மதம் அடிப்படையில் செயல்படுகின்றன. பாகிஸ்தானிலும் மதம் அடிப்படையில் ஆட்சி நடக்கிறது. ஆனால், இந்தியா மதச்சார்பற்ற நாடாகும்.காஷ்மீரில் சுற்றுலா பயணியர் மீது, தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் மீது, பிரதமர் நரேந்திர மோடி நடவடிக்கை எடுப்பார். அவரது முடிவுக்கு, அனைவரும் ஆதரவளிக்க வேண்டும்.இவ்வாறு அவர்கூறினார்.