பயணியர் வாகனமானது அவசரகால ஆம்புலன்ஸ்கள் கண்டுகொள்ளாத அதிகாரிகள்
கதக்: நோயாளிகளை அழைத்து செல்ல வேண்டிய ஆம்புலன்சை, பயணியர் வாகனமாக பயன்படுத்துவதால், மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். கதக் மாவட்டத்தில், அரசு சார்ந்த ஆம்புலன்சை, நோயாளிகளின் தேவைக்கு பயன்படுத்தாமல், ஊழியர்கள் பணம் சம்பாதிக்க பயன்படுத்துகின்றனர். பஸ் நிறுத்தங்களில் பஸ்க்காக காத்திருக்கும் பயணியரை, ஆம்புலன்ஸ் ஊழியர்கள் ஆம்புலன்சில் அழைத்து சென்று, அவர்கள் இறங்க வேண்டிய இடத்தில் இறக்கி விட்டு, கட்டணம் வசூலிக்கின்றனர். கதக் பஸ் நிறுத்தம் ஒன்றில், ஆம்புலன்ஸ் வந்து நிற்பதையும், அதில் பயணியர் முட்டி, மோதி ஏறுவதையும், அந்த வழியாக சென்ற வாகன பயணியர், தங்களின் மொபைல் போனில் வீடியோ எடுத்து, சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர். கதக்கின் ஜிம்ஸ் மருத்துவமனையில் இருந்து, வெவ்வேறு பகுதிக்கு செல்ல, சரியான பஸ் வசதி இல்லாததால், ஆம்புலன்சை பயன்படுத்துகின்றனர். இதற்காக அவர்களிடம் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் பணம் வசூலிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆம்புலன்ஸ்களை நோயாளிகளை தவிர, பொது மக்களின் போக்குவரத்துக்கு பயன்படுத்த கூடாது. அப்படி செய்வது சட்டவிரோதமாகும். நோயாளிகளை அழைத்து செல்லும் போது, அவர்களுக்கு தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. அதேபோல, பொது மக்களுக்கு நோய் பாதிப்பு ஏற்படலாம். ஆனால், பல நாட்களாக, மக்களின் போக்குவரத்துக்கு ஆம்புலன்ஸ் பயன்படுத்துவது தெரிந்தும், மருத்துவமனை அதிகாரிகள் மவுனமாக இருப்பது, மக்களுக்கு அதிருப்தி அளித்துள்ளது.