பவித்ரா கவுடா ஜாமின் மனு செஷன்ஸ் கோர்ட் தள்ளுபடி
பெங்களூரு : சித்ரதுர்கா ரேணுகாசாமி கொலை வழக்கில் பவித்ரா கவுடாவின் ஜாமின் மனுவை, 64வது செஷன்ஸ் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. சித்ரதுர்கா ரேணுகாசாமி கொலை வழக்கில், நடிகர் தர்ஷன், பவித்ரா கவுடா உட்பட ஏழு பேர் ஜாமின் பெற்றனர். இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில், கர்நாடக அரசு முறையிட்டது. அப்போது, கர்நாடக உயர் நீதிமன்றத்தின் மீது அதிருப்தி தெரிவித்த உச்ச நீதிமன்றம், கடந்த மாதம் 14ம் தேதி, நடிகர் தர்ஷன் உட்பட ஏழு பேரின் ஜாமினை ரத்து செய்தது. இதையடுத்து ஏழு பேரும் மீண்டும் கைது செய்யப்பட்டு, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர். தனக்கு ஜாமின் வழங்க கோரி, 64வது செஷன்ஸ் நீதிமன்றத்தில் பவித்ரா கவுடா மனு தாக்கல் செய்திருந்தார். இம்மனு மீது நீதிபதி நாயக் முன் விசாரணை நடந்து வந்தது. மனுதாரர் பவித்ரா கவுடா தரப்பில் வக்கீல் வாதிடுகையில், 'தந்தை இல்லாததால், தன் மகளை மனுதாரர் பார்த்து கொள்ள வேண்டும். எனவே, அவருக்கு ஜாமின் வழங்க வேண்டும்' என்று வாதிட்டிருந்தார். இம்மனு மீதான தீர்ப்பு நேற்று அறிவிக்கப்படும் என்று நீதிபதி நாயக் கூறியிருந்தார். அதன்படி நீதிமன்றம் நேற்று கூடியபோது, பவித்ரா கவுடாவின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.