78 மேல்மட்ட நடைபாதைகள் மாநகராட்சிக்கு போலீஸ் கடிதம்
பெங்களூரு: பாதசாரிகள் சுலபமாக சாலையை கடப்பதற்கு புதிதாக 78 மேல்மட்ட நடைபாதைகள் அமைக்கும்படி, பெங்களூரு போக்குவரத்து போலீஸ், மாநகராட்சிக்கு கடிதம் எழுதி உள்ளது. பாதசாரிகள் சுலபமாக சாலையை கடப்பது, பாதசாரிகள் பாதுகாப்பு, போக்குவரத்தை குறைப்பதிலும் 'ஸ்கைவாக்' எனும் மேல்மட்ட நடைபாதைகளின் பங்கு இன்றியமையாதது. தற்போது, பெங்களூரில் 82 மேல்மட்ட நடைபாதைகள் உள்ளன. இதில், சில மேல்மட்ட நடைபாதைகள் பராமரிப்பின்றி மோசமான நிலையில் உள்ளன. இந்நிலையில், நகரில் மேலும் 78 மேல்மட்ட நடைபாதைகள் அமைக்கும்படி, பெங்களூரு மாநகராட்சிக்கு போக்குவரத்து போலீசார் கடிதம் எழுதி உள்ளனர். அந்த கடிதத்தில், 'ஓல்ட் மெட்ராஸ் ரோடு, பல்லாரி - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை 47, கனகபுரா ரோடு, அவுட்டர் ரிங் ரோடு, மைசூரு ரோடு, துமகூரு ரோடு, ஹெசரகட்டா மெயின் ரோடு, சர்ஜாபூர் ரோடு உள்ளிட்ட 78 இடங்களை மாநகராட்சிக்கு போக்குவரத்து போலீசார் அடையாளம் காட்டியுள்ளனர். இதுகுறித்து, போக்குவரத்து போலீஸ் இணை கமிஷனர் கார்த்திக் ரெட்டி கூறுகையில், ''அதிக போக்குவரத்து நெரிசலின்போது, பாதசாரிகள் சாலையை கடப்பது, கடினமான ஒன்றாகும். எனவே, அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்படும் சந்திப்புகளில், மேல்மட்ட நடைபாதைகள் அமைக்க வேண்டும்,'' என்றார்.