பா.ஜ., பிரமுகர் மீது போலீசில் வழக்கு பதிவு
சிக்கமகளூரு: முஸ்லிம் குறித்து ஆட்சேபனைக்குரிய விதத்தில் கருத்து தெரிவித்ததற்காக பா.ஜ., - எம்.எல்.சி., - சி.டி.ரவி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 'நீட்' விவகாரத்தில் கரப்பான் பூச்சியை கண்டித்து, சிக்கமகளூரில் கடந்த 23ம் தேதி நடந்த பேரணியில், பா.ஜ., - எம்.எல்.சி., சி.டி.ரவி பங்கேற்றார். அதில், 'முஸ்லிமிற்கும் நீட் தேர்வுக்கும் என்ன சம்பந்தம் உள்ளது... படிப்பறிவில்லாத முஸ்லிம் நீட் போராட்டத்தில் பங்கேற்கிறார். நீட் வினாத்தாள் கசிவிற்கும், சி.ஏ.ஏ.,மற்றும் என்.ஆர்.சி., ஆகியவற்றுக்கும் என்ன தொடர்பு உள்ளது. 'முஸ்லிம்களின் மார்பை பிளந்து பார்த்தாலும், கல்வி என்ற மூன்று எழுத்துகளை காண முடியாது' என, சி.டி.ரவி பேசினார். இவர் பேசும் வீடியோ பரவியது. இதற்கு முஸ்லிம் அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ரவியை உடனடியாக கைது செய்ய வேண்டும் என, கர்நாடக மாநில முஸ்லிம் கூட்டமைப்பு, மாநில அரசை வலியுறுத்தியது. இந்நிலையில், சிக்கமகளூரில் உள்ள ஜாமியா மசூதியின் தலைவர் முடாசிர் பாஷா, சிக்கமகளூரு நகர போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். குறிப்பிட்ட மதத்தினரை இழிவுபடுத்தும் நோக்கில் பேசியதற்காகவும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் நோக்கில் பேசியதற்காகவும், ரவி மீது எப்.ஐ.ஆர்., பதிவு செய்யப்பட்டது. ரவியை கைது செய்ய வேண்டும் என பல முஸ்லிம் அமைப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். புகார் அளித்த முடாசிர் பாஷா பேசியதாவது: ரவியின் பேச்சை சமூக வலைத்தளத்தில் கண்டேன். முஸ்லிம் சமூகத்தை குறிவைத்து வெறுப்பு பிரசாரம் செய்தார். அவருடைய கருத்துகள் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் நோக்கில் உள்ளன. இதனால், போலீசில் புகார் செய்தேன். இவ்வாறு அவர் பேசினார்.