உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / பிரதீப் ஈஸ்வர் - பிரதாப் சிம்ஹா வார்த்தை போர் காங்., - பா.ஜ., தலைவர்களுக்கு தர்மசங்கடம்

பிரதீப் ஈஸ்வர் - பிரதாப் சிம்ஹா வார்த்தை போர் காங்., - பா.ஜ., தலைவர்களுக்கு தர்மசங்கடம்

கர்நாடகாவில் பா.ஜ., காங்கிரஸ் என இரண்டு கட்சிகளிலும் மூத்த தலைவர்கள் பலர் உள்ளனர். இந்த மூத்த தலைவர்களின் கவனத்தை பெறவும், மாநில அரசியலில் தவிர்க்க முடியாத அரசியல் தலைவராக உருவெடுக்க வேண்டும் என்ற எண்ணத்திலும் பல இளம் தலைவர்கள் செயல்பட்டு வருகின்றனர். இதற்காக, அவர்கள் பல வழிகளை கையாளுகின்றனர். இது போன்ற வழிமுறைகளை கடைப்பிடித்து மூத்த தலைவர்கள் மனதில் இடம்பிடிக்க விரும்பும் இருவர் வேறு யாருமில்லை... நாம் அனைவரும் அறிந்த பேச்சு புலிகளான காங்., - எம்.எல்.ஏ., பிரதீப் ஈஸ்வர் மற்றும் பா.ஜ., முன்னாள் எம்.பி, பிரதாப் சிம்ஹா தான் அவர்கள். இவர்கள் இருவரும் மூத்த தலைவர்களின் மனதில் இடம்பிடிக்க வரம்பு மீறி செயல்பட்டு வருகின்றனர். மைசூரு மாவட்டத்தை சேர்ந்த பிரதாப் சிம்ஹா தீவிர அரசியல்வாதியாக செயல்பட்டு வருகிறார். இவர், மாநிலத்தில் எங்கு போராட்டம் நடந்தாலும், அங்கு சென்று அரசியல் செய்வதையே வாடிக்கையாக வைத்து உள்ளார். இதனால், இவர் மீது ஆளுங்கட்சியினர் ஆத்திரத்தில் உள்ளனர். தீவிரம் இவரது வாயை அடைக்க, பொங்கி எழுந்த சிக்கபல்லாபூர் காங்கிரஸ் எம்.எல்.ஏ., பிரதீப் ஈஸ்வர் வார்த்தை மோதலில் ஈடுபட துவங்கினார். முதலில் அறிக்கைக்கு பதிலடி என சுமுகமாக துவங்கிய மோதல், நாளடைவில் தீவிரமடைந்தது. ஒரு கட்டத்தில் இருவருமே அநாகரிகமாக பேசுவது, வரம்பு மீறி விமர்சிப்பது, குடும்ப பின்னணி, தனிப்பட்ட வாழ்க்கை குறித்து விமர்சனம் செய்வது என எல்லை தாண்டி சென்றனர். இது இவர்கள் இருவருக்கு மட்டுமின்றி, இரண்டு கட்சிக்குமே அவப்பெயரை ஏற்படுத்தியது. இதனால், இருவரையும் அவர்களது கட்சியின் மூத்த தலைவர்கள் அழைத்து அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். எதிர்பார்ப்பு இதனால், கடந்த இரண்டு நாட்களாக இருவரும் வாயை திறக்காமல் உள்ளனர். இதை இவர்கள் எத்தனை நாட்கள் கடைப்பிடிப்பர் என்பது சந்தேகமே. ஏனெனில், இருவரும் உணவு உண்ணாமல் கூட இருந்து விடுவர்; ஆனால், பேசாமல் இருக்க மாட்டார்கள். எனவே, கூடிய விரைவில் வார்த்தை போர் ஆரம்பமாகும் என எதிர்பார்க்கலாம். 'எது எப்படியோ, மூத்த தலைவர்கள் மனதில் இடம்பிடிக்க நலத்திட்ட வழிகள் செய்வது, மக்கள் சேவையில் ஈடுபடுவது போன்ற எத்தனையோ நல்வழிகள் இருக்கின்றன. இருப்பினும், தரம் தாழ்ந்து விமர்சிப்பதன் மூலம் பெரிய அரசியல்வாதியாக நினைப்பது எவ்விதத்தில் சரி' என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ