உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / 1.5 கி.மீ.,க்கு பெங்களூரில் மேம்பாலம்: பிரஸ்டிஜ் குரூப் நிறுவனத்துக்கு அனுமதி

1.5 கி.மீ.,க்கு பெங்களூரில் மேம்பாலம்: பிரஸ்டிஜ் குரூப் நிறுவனத்துக்கு அனுமதி

பெங்களூரு: பெல்லந்துாரில் வெளி வட்டசாலையில் இருந்து, டெக்பார்க் வரை 1.5 கி.மீ., நீளத்திற்கு தனியார் மேம்பாலம் கட்ட, பெங்களூரு மாநகராட்சி அனுமதி அளித்துள்ளது.

நெரிசல்

பெங்களூரில் போக்குவரத்து நெருக்கடியால், மக்கள் மட்டுமின்றி, தொழில் நிறுவனங்களும் பாதிக்கப்படுகின்றன. தினமும் அலுவலகம் செல்லும் ஊழியர்கள், போக்குவரத்து நெரிசலில் சிக்கித் திணறுவது, அன்றாடம் நடக்கிறது. இதற்கு தீர்வு காணும் வகையில், அரசு மற்றும் பெங்களூரு மாநகராட்சி ஒருங்கிணைப்பில் முக்கியமான சாலைகளில் மேம்பாலங்கள் கட்டப்பட்டுஉள்ளன.தங்களின் ஊழியர்கள் போக்குவரத்து நெரிசல் இல்லாமல், அலுவலகம் வந்தடையும் வகையில், பிரபல தனியார் நிறுவனங்கள் ஆர்வம் காட்டுகின்றன. இதற்கு முன்பு மான்யதா எம்பசி பிசினெஸ் பார்க் நிறுவனம், தன் அலுவலகத்துக்கு இணைப்பு ஏற்படுத்தும் மேம்பாலம் கட்டியது. வெளி வட்ட சாலையில் மேம்பாலம் கட்டியது.லுலு மால், பொது சாலையின் ஒரு பகுதியில் கீழ்ப்பாலம் கட்டியது. அதேபோன்று பாக்மனே குரூப்ஸ், தொட்டனகுந்தியில் உள்ள தன் அலுவலகத்துக்கு, இணைப்பு ஏற்படுத்த 600 மீட்டர் நீளத்தில் மேம்பாலம் கட்ட, பெங்களூரு மாநகராட்சியிடம் அனுமதி கேட்டுள்ளது.

வெளி வட்டசாலை

தற்போது பிரஸ்டிஜ் குரூப் நிறுவனம், பெல்லந்துாரில் வெளி வட்டசாலையில் இருந்து, டெக் பார்க் வரை 1.5 கி.மீ., நீளத்திற்கு மேம்பாலம் கட்ட, பெங்களூரு மாநகராட்சியிடம் அனுமதி பெற்றுள்ளது. இதற்கு முன்பு 2022 டிசம்பர் மற்றும் 2023 நவம்பரில் மேம்பாலம் கட்ட அனுமதி கோரியது. ஆனால் அனுமதி கிடைக்கவில்லை. அதன்பின் பிரஸ்டிஜ் நிறுவனம், துணை முதல்வர் சிவகுமாரின் கவனத்துக்கு கொண்டு சென்றதால், மாநகராட்சி அனுமதி அளித்தது.பணிகளை துவக்க பிரஸ்டிஜ் நிறுவனம், தயாராகி வருகிறது. பொது சாலை பக்கத்தில், மழைநீர் சாக்கடையின் மேற்பகுதியில் மேம்பாலம் கட்டப்படும். இத்திட்டத்தின் செலவு முழுதையும், பிரஸ்டிஜ் ஏற்கும். மேம்பாலம் கட்ட அனுமதி அளித்ததற்கு பிரதிபலனாக, கரியம்மன அக்ரஹாரா சாலை விஸ்தரிப்பு செலவையும், பிரஸ்டிஜ் குரூப் ஏற்கும்.இதுகுறித்து, பெங்களூரு மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:மேம்பாலம் கட்ட பிரஸ்டிஜ் குரூப் நிறுவனத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 40 அடி சாலை அமைக்கவும் நிதி வழங்கும்படி, அந்நிறுவனத்துக்கு மாநகராட்சி நிபந்தனை விதித்துள்ளது. நிறுவனமும் ஏற்றுக்கொண்டது. புதிய சாலை அமைந்தால், சக்ரா மருத்துவமனை சாலைக்கு செல்லும் பயண தொலைவு 2.5 மீட்டராக குறையும்.பெங்களூரின் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும். இதை கருத்தில் கொண்டு, அரசு மற்றும் தனியார் ஒருங்கிணைந்த பணிகளை அரசு ஊக்கப்படுத்துகிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !