உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / போலீஸ் நிலையத்தில் கைதி தற்கொலை சி.ஐ.டி.,யிடம் விசாரணை ஒப்படைப்பு

போலீஸ் நிலையத்தில் கைதி தற்கொலை சி.ஐ.டி.,யிடம் விசாரணை ஒப்படைப்பு

ராம்நகர்: போலீஸ் நிலையத்தில் கைதி தற்கொலை செய்து கொண்ட வழக்கின் விசாரணை, சி.ஐ.டி.,யிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பெங்களூரு தெற்கு, சென்னப்பட்டணா அருகே பொம்மநாயக்கனஹள்ளியில் உள்ள ஹொன்னரதி கிராமத்தில், கடந்த 18ம் தேதி திருட்டு நடந்தது. இதுதொடர்பாக கெஸ்துார் கிராமத்தின் ரமேஷ், 45, அவரது மகன் மஞ்சு, 22, அனில், 30, ஆகியோர் கைது செய்யப்பட்டனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவர்களை காவலில் எடுத்து, எம்.கே.தொட்டி போலீசார் விசாரித்து வந்தனர். நேற்று முன்தினம் காலை போலீஸ் நிலைய கழிப்பறையில் ரமேஷ் துாக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். விசாரணை என்ற பெயரில் ரமேஷை அடித்துக் கொன்று, உடலை துாக்கில் தொங்க விட்டதாக, போலீசார் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து எஸ்.பி., சீனிவாஸ் கவுடா நேற்று கூறியது: எம்.கே. தொட்டி போலீஸ் நிலையத்தில், விசாரணை கைதி ரமேஷ் துாக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். அவரை போலீசார் அடித்ததற்கான எந்த தடயமும் இல்லை. அவரது உடலில் காயம் இல்லை. ரமேஷ் மீது நான்கு திருட்டு வழக்குகள் உள்ளன. ஒரு வழக்கில் ஏற்கனவே ஓராண்டு சிறையில் இருந்துள்ளார். அவரது மகன் மஞ்சு மீதும், ஐந்து திருட்டு வழக்குகள் உள்ளன. லாக்கப் மரணம் என்று ரமேஷ் குடும்பத்தினர் சந்தேகப்படுவதால், சி.ஐ.டி.,யிடம் விசாரணை ஒப்படைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !