மொபைல் டவர் நிறுவ போராட்டம் ஜாதிவாரி சர்வே புறக்கணிப்பு
ஷிவமொக்கா: செல்போன் டவர் நிறுவக்கோரி, ஜாதிவாரி சர்வேயை புறக்கணிப்பதாக கிராம மக்கள் அறிவித்துள்ளனர். ஷிவமொக்கா மாவட்டம், பாரூர் கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் ஜாதிவாரி சர்வே நடத்த நேற்று அதிகாரிகள் சென்றனர். அந்தகிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட பாரூர், கல்லுக்கோப்பா, தெப்பகோடு, முலுக்கேரி ஆகிய கிராமங்களில், 'சிக்னல்' கிடைக்கவில்லை. இதனால், வீடு, வீடாக சென்று,ஜாதிவாரி சர்வே நடத்த முடியாமல் அதிகாரிகள் திணறினர். எனவே, அங்கு வசிக்கும் அனைத்து மக்களையும் கிராம பஞ்சாயத்து அலுவலகம் முன் வந்து, பதிவு செய்து கொள்ளும்படி அறிவுறுத்தினர். இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், கிராம பஞ்சாயத்து அலுவலகம் முன் தர்ணா போராட்டம் நடத்தினர். 'அதிகாரிகள் வீடு, வீடாக வந்து சர்வே நடத்த வேண்டும். செல்போன் டவரை விரைந்து அமைக்க வேண்டும்' என, கோரிக்கை வைத்தனர். கிராமத்தைச் சேர்ந்த சசிகுமார் கூறியதாவது: எங்கள் கிராமத்தில் மூன்று ஆண்டுகளாக செல்போன் சிக்னல் கிடைப்பதே இல்லை. இதனால், செல்போன் பயன்படுத்துவதில் சிரமம் ஏற்படுகிறது. இதுகுறித்து பல முறை புகார் செய்துள்ளோம். அதிகாரிகள், மொபைல் நிறுவனங்கள் என, யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை. எங்கள் கிராமத்தில் செல்போன் டவர் நிறுவப்பட்டால் மட்டுமே நாங்கள் ஜாதிவாரி சர்வேயில் பங்கேற்போம். அதுவரை ஜாதிவாரி சர்வேயை புறக்கணிப்போம். இவ்வாறு அவர் கூறினார். போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் சாகர் தாலுகா தாசில்தார் சந்திரசேகர் நாயக் பேச்சு நடத்தினார். பி.எஸ்.என்.எல்., அதிகாரிகளுடன் பேசி, மூன்று நாட்களுக்குள் டவர் நிறுவப்படும் என உறுதியளித்தார். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். பாரூர் கிராம பஞ்சாயத்தில் உள்ள பல கிராம மக்கள், ஜாதிவாரி சர்வேயை புறக்கணித்துள்ளனர்.