ஆர்.வி., சாலை - பொம்மசந்திரா ரயில் இன்று அதிகாலை 5:00 மணிக்கு புறப்படும்
பெங்களூரு : ' 'தொடர் விடுமுறையை கொண்டாடிவிட்டு வரும் பொது மக்கள் வசதிக்காக இன்று மட்டும் அதிகாலை 5:00 மணிக்கு ஆர்.வி., சாலை மற்றும் பொம்மசந்திராவில் இருந்து மெட்ரோ ரயில் புறப்படும்' என 'நம்ம மெட்ரோ' நிர்வாகம் அறிவித்து உள்ளது. பெங்களூரு ஆர்.வி., சாலையில் இருந்து பொம்மசந்திரா வரையிலான மஞ்சள் வழித்தடம் ரயில் சேவையை, கடந்த 10ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார். தமிழகம் ஓசூர் வழியாக பெங்களூருக்கு வரும் பயணியருக்கு இது வரப்பிரசாதமாக அமைந்து உள்ளது. இதற்கு பலரும் வரவேற்பு அளித்துள்ளனர். தினமும் மெட்ரோவில் பயணிக்க விரும்பும் குழந்தைகளை, பெற்றோர் அழைத்து செல்கின்றனர். இந்நிலையில் தொடர் விடுமுறையால், பலர் அவரவர் ஊர்களுக்கு சென்றுள்ளனர். இவர்களில் பலர் நேற்றிரவும், சிலர் இன்று காலையும் நகருக்கு வருகை தருவர். காலையில் வருவோருக்கு வசதியாக, நம்ம மெட்ரோ சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது. இதன்படி, ஆர்.வி., சாலை மற்றும் பொம்மசந்திரா மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து இன்று அதிகாலை 5:00 மணிக்கே மெட்ரோ ரயில் தனது போக்குவரத்தை துவங்கிவிடும். இந்த வசதி இன்று மட்டுமே. நாளை முதல் வழக்கம் போல் காலை 6:30 மணிக்கு புறப்படும். கூட்ட நெரிசலில் சிக்கி பயணியர் தவிப்பதை தடுக்க, இந்த வசதி ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அதுபோன்று இளஞ்சிவப்பு மற்றும் பச்சை நிற வழித்தடத்தில் இயங்கும் ரயில்கள், வழக்கம் போல், அதிகாலை 4:15 மணிக்கு புறப்படும்' என்று அறிவித்து உள்ளது.