கார் மோதியதில் பள்ளி சிறுமி பலி
நெலமங்களா: பள்ளிக்கு நடந்து செல்லும் போது, கார் மோதியதில், 10 வயது சிறுமி பலியானார். பெங்களூரு ரூரல் மாவட்டம், நெலமங்களா தாலுகாவின், பீரவாரா கிராமத்தில் வசிப்பவர் ஸ்ரீகாந்த், கூலி தொழிலாளி, இவரது மகள் லிகிதா, 10, நான்காம் வகுப்பு மாணவி. கிராமத்தின் அருகே உள்ள பள்ளியில் படித்தார். நேற்று காலை, தன் பெரியம்மாவுடன் பள்ளிக்கு லிகிதா நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது வேகமாக வந்த கார் மோதியதில், பலத்த காயமடைந்த சிறுமி, சம்பவ இடத்தில் உயிரிழந்தார். அவரது பெரியம்மா உயிர் தப்பினார். பீரவாரா கிராமம் அருகில், அவ்வப்போது விபத்து நடக்கிறது. சாலையை கடக்க, நடை மேம்பாலம் கட்டும்படி கிராமத்தினர் நீண்ட காலமாக வேண்டுகோள் விடுத்துள்ளனர்.