உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / தங்கவயலில் 10 ஏக்கரில் அமைகிறது அறிவியல் மையம்

தங்கவயலில் 10 ஏக்கரில் அமைகிறது அறிவியல் மையம்

தங்கவயல்: “தங்கவயலில் 10 ஏக்கர் பரப்பளவில் அறிவியல் மையம் உருவாக்கப்படும்,” என, மாநில சிறிய நீர்ப்பாசனம்; அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் போசராஜ் தெரிவித்தார். தங்கவயல் உரிகம் பகுதியில் அறிவியல் மையம் அமைவதற்கான இடத்தை ஆய்வு செய்த பின், அவர் அளித்த பேட்டி: ராம்நகர், சித்ரதுர்கா, விஜயநகர் ஆகிய மாவட்டங்களில் அறிவியல் மையங்களை அமைப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்து வருகிறோம். மார்ச் மாதம் இதன் பணிகளை முடிக்கப்படும். தங்கவயலில் அறிவியல் மையம் அமைக்க 10 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில் கோளரங்கம் ஏற்படுத்துவதற்காக முதல் கட்டத்தில் 9 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும். சித்ரதுர்கா, விஜயநகரா, மைசூரு, கதக், சிக்கமகளூரு ஆகிய மாவட்டங்களிலும் அறிவியல் மையங்களை நிறுவ இரண்டு ஆண்டுகளாகவே திட்டமிடப்பட்டு நிறைவடையும் கட்டத்தை எட்டியுள்ளது. ராம்நகரில் ஒரு பிராந்திய அறிவியல் மையம் அனுமதிக்கப்பட்டுள்ளது. இதற்கு மத்திய அரசின் மானியமும் ஒப்புதலும் கிடைத்துள்ளது. இந்த திட் டத்திற்கு முதல்வர் விரைவில் 26 கோடி ரூபாய் ஒதுக்குவார். பெங்களூரு அருகே ஒரு அறிவியல் நகரத்தை ஏற்படுத்தவும் மத்திய அரசிடம் இருந்து ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. தேவனஹள்ளி அருகே கே.ஐ.ஏ.டி.பி., என்ற கர்நாடக தொழில் மேம்பாட்டு வாரியத்திடம் இருந்து 20 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. அங்கு 300 கோடி ரூபாய் செலவில் அறிவியல் மையம் கட்டப்படும். குழந்தைகளின் வசதிக்காக 11 நடமாடும் கோளரங்கங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன. நடமாடும் வாகனங்கள் ஒரு வாரத்தில் தொடங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !