ரேவண்ணா மீதான பாலியல் வன்கொடுமை வழக்கு ரத்து
பெங்களூரு: பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக, ம.ஜ.த., - எம்.எல்.ஏ., ரேவண்ணா மீது தொடரப்பட்ட வழக்கில், புகார் அளிப்பதில் ஏற்பட்ட தாமதத்தை காரணமாக கருதிய, 42வது ஏ.சி.ஜே.எம்., நீதிமன்றம், அவர் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்தது. ஹொளேநரசிபுராவை சேர்ந்த பெண் ஒருவர், ம.ஜ.த., - எம்.எல்.ஏ., ரேவண்ணா, தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக, புகார் அளித்திருந்தார். இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட ரேவண்ணா, பின் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். வெளியே வந்த அவர், தன் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யும்படி, 42வது ஏ.சி.ஜே.எம்., எனும் கூடுதல் முதன்மை நீதித்துறை மாஜிஸ்டிரேட் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிமன்றம், 'சம்பவம் நடந்ததாக கூறப்படும் நேரத்திற்கும், புகார் அளிக்கப்பட்ட நேரத்திற்கும் இடையில் தாமதம் இருப்பது தெரிகிறது. அவர் மீது தொடரப்பட்ட வழக்கு ரத்து செய்யப்படுகிறது' என உத்தரவிட்டது.