உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  உலக பொருளாதார மாநாடு பங்கேற்கிறார் சிவகுமார்

 உலக பொருளாதார மாநாடு பங்கேற்கிறார் சிவகுமார்

உலக பொருளாதார மாநாட்டில் பங்கேற்பு

சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடக்கும் உலக பொருளாதார அமைப்பு மாநாட்டில் பங்கேற்க, துணை முதல்வர் சிவகுமார் இன்று செல்கிறார். 'காங்கிரஸ் கட்சி தொடர்பாக, பெங்களூரு மற்றும் டில்லியில் நடக்கும் கூட்டத்தில் பங்கேற்க இருப்பதால், சுவிட்சர்லாந்தில், நேற்று முதல் வரும், 23ம் தேதி வரை நடக்கும் உலக பொருளாதார மாநாட்டில் பங்கேற்கவில்லை' என, நேற்று முன்தினம் துணை முதல்வர் சிவகுமார் தெரிவித்திருந்தார். இதை எதிர்க்கட்சியினர் விமர்சித்தனர். 'மாநில வளர்ச்சிக்கும், மேம்பாட்டுக்கும் பொருளாதாரம் தேவைப்படும் போது, அது தொடர்பான மாநாட்டை துணை முதல்வர் புறக்கணிப்பது ஏற்புடையதல்ல' என்றும் கூறினர். மாநில பா.ஜ., தலைவர் விஜயேந்திரா, 'மாநில முதல்வர் பதவிக்காக சித்தரமையாவும், சிவகுமாரும் வெளிப்படையாக சண்டையிட்டு வருகின்றனர். பொங்கலுக்கு பின், சிவகுமார் முதல்வராக்கப்படுவார் என்று, அவரது ஆதரவாளர்கள் நேரடியாக கூறி வருகின்றனர். இவர்களின் பனிப்போரால், டாவோஸ் மாநாட்டை புறக்கணித்து, மாநிலத்தின் நன்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தி உள்ளனர்' என்று குற்றம் சாட்டியிருந்தார். இந்நிலையில், பெங்களூரில் நேற்று சிவகுமார் கூறுகையில், ''சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடக்கும் உலக பொருளாதார மாநாட்டில் பங்கேற்க, கட்சி தலைமையும், முதல்வர் சித்தராமையாவும் அனுமதி அளித்துள்ளனர். எனவே, அந்த மாநாட்டில் பங்கேற்க இன்று புறப்படுகிறேன். மாநில நலனிற்காக, இம்மாநாட்டில் நான் பங்கேற்கும்படி, எதிர்க்கட்சியினரும் அறிவுரை கூறி உள்ளனர்,'' என்றார். அதேவேளையில், கனரக தொழில்கள் துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல் தலைமையிலான குழுவினர், நேற்று முன்தினம் டாவோசுக்கு புறப்பட்டு சென்றது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை