உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  சமூக புறக்கணிப்பு தடுப்பு மசோதாவுக்கு சட்டசபையில் ஒப்புதல்

 சமூக புறக்கணிப்பு தடுப்பு மசோதாவுக்கு சட்டசபையில் ஒப்புதல்

பெலகாவி: சமூக புறக்கணிப்பு தடுப்பு மசோதாவுக்கு, கர்நாடக சட்டசபையில் நேற்று ஒப்புதல் கிடைத்தது. சமூக புறக்கணிப்பு செய்வோருக்கு, மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை, ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கும், சமூக புறக்கணிப்பு தடுப்பு மசோதாவை, சமூக நல அமைச்சர் மஹாதேவப்பா நேற்று சட்டசபையில் தாக்கல் செய்து பேசுகையில், ''நாம் நாடு சுதந்திரம் அடைந்து, 75 ஆண்டுகளுக்கு பிறகும், சமூக புறக்கணிப்பு இன்னும் நடக்கிறது. இது மனித, சிவில் உரிமையை மீறுவதாகும். இதை தடை செய்ய வரலாற்று சிறப்பு மிக்க மசோதா உருவாக்கப்பட்டு உள்ளது,'' என்றார். எதிர்க்கட்சி தலைவர் அசோக் பேசுகையில், '' நாம், 21ம் நுாற்றாண்டில் இருக்கும் போதும் பாகுபாடு நிலவுகிறது. தொழிலை அடிப்படையாக கொண்டு சமூகங்களை விமர்சிக்கும் மனப்பான்மை மாற வேண்டும். இந்த மசோதாவை அமல்படுத்தும் போது, இதுகுறித்து கிராமம், கிராமமாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்,'' என்றார். சமூக புறக்கணிப்பு தொடர்பாக, போலீசாரே தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்யும் வகையில், மசோதாவை திருத்த வேண்டும் என்று, காங்கிரஸ் மூத்த உறுப்பினர் ஜெயசந்திரா கூறினார். இந்த மசோதாவின் மீது பேசிய அனைத்து கட்சி உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்தனர். இதையடுத்து, ஒருமனதாக மசோதாவுக்கு ஒப்புதல் கிடைத்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி