தாயை அடித்த 2வது கணவரை அடித்து கொன்ற மகன் கைது
துமகூரு: தன் தாயை அடித்த வளர்ப்பு தந்தையை கொலை செய்த மகன் கைது செய்யப்பட்டார். மஹாராஷ்டிராவை சேர்ந்தவர் யசோதா, 37. இவருக்கு திருமணமாகி ஹரிஷ், 18, வசந்த், 15, என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன், கணவர் இறந்துவிட்டார். அதன்பின் துளசி ராம், 40, என்பவரை யசோதா இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். தம்பதி, துமகூரு மாவட்டம், சிரா தாலுகாவின், மாரனகெரே கொல்லரஹட்டி கிராமத்தில், பிள்ளைகளுடன் வசிக்கின்றனர். துளசி ராமும், யசோதாவும் இதே கிராமத்தில் உள்ள தொழிற்சாலையில் பணியாற்றினர். ஹரிஷுக்கு, தன் தாய் இரண்டாம் திருமணம் செய்து கொண்டது பிடிக்கவில்லை. எப்போதும் வளர்ப்பு தந்தை துளசிராம் மீது எரிந்து விழுவார். இவரும் மனைவியை நன்றாக நடத்தவில்லை என, கூறப்படுகிறது. தம்பதிக்கு நேற்று முன்தினம் இரவு, ஏதோ காரணத்தால் சண்டை வந்தது. அப்போது மனைவியை துளசிராம் தாக்கினார். இதை கண்டு கோபமடைந்த ஹரிஷ், கோடாரியால் துளசிராமை கண் மூடித்தனமாக தாக்கி கொலை செய்தார். இதை கண்ட அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் வரும் வரை, ஹரிஷ் தப்பியோட முயற்சிக்காமல், துளசிராமின் உடல் அருகிலேயே அமர்ந்திருந்தார். அங்கு வந்த துருவகெரே போலீசார், அவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.