மாணவர்கள் கல்வி சுற்றுலா போலீஸ் விதிமுறை வெளியீடு
பெங்களூரு: பள்ளி, கல்லுாரி சுற்றுலாவுக்கு மாணவ, மாணவியரை அழைத்து செல்வது தொடர்பாக, போலீஸ்துறை விதிமுறை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக, போலீஸ் துறை வெளியிட்ட அறிக்கை: கல்வி சுற்றுலா செல்லும் போது, பஸ்களின் சூழ்நிலை குறித்து போக்குவரத்து துறையிடம், தகவல் பெற வேண்டும். பஸ் ஓட்டுநர் குடிப்பழக்கம் இல்லாதவரா, போதைப்பொருள் பயன்படுத்தாதவரா என்பதை சோதித்து உறுதி செய்து கொள்வது அவசியம். சுற்றுலாவின் போது ஒரு ஆசிரியரும், பாதுகாப்பு ஊழியரும் இருப்பது கட்டாயம். பஸ்சில் முதலுதவி சிகிச்சை பெட்டி இருக்க வேண்டும். மாணவ - மாணவியரை கல்வி சுற்றுலா அழைத்து செல்வதில், ஆட்சேபனை இல்லை என, அவர்களின் பெற்றோரிடம் பள்ளி, கல்லுாரி நிறுவனங்கள் ஒப்புதல் கடிதம் பெற வேண்டும். போலீஸ் துறையின் இந்த விதிமுறைகளை, தவறாமல் பின்பற்ற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.