ஹனிடிராப் மூலம் ஜோதிடரை தன் வலையில் விழ வைத்த சுசித்ரா
கார்வார்: கொலை வழக்கில் கைதான ஜோதிடர் கமலாகர் பட்டை, ஹனிடிராப் மூலம் சுசித்ரா தன் வலையில் விழ வைத்தார் என்று, அவரது கணவர் மகேஷ் பகீர் தகவல் கூறி உள்ளார். உத்தர கன்னடா மாவட்டம் சித்தாபூர் தாலுகா, அவரேகுப்பா கிராமத்தை சேர்ந்த வசந்த் நாயக், 39, என்பவரை, கள்ளக்காதல் விவகாரத்தில் கொலை செய்த, ஷிவமொக்கா ஜோதிடர் கமலாகர் பட், அவரது கள்ளக்காதலி சுசித்ரா உட்பட ஏழு பேர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் கமலாகர் பட்டின் தீவிர ஆதரவாளரான வினய், 33 என்பவர், நேற்று கைது செய்யப்பட்டார். இவர் தான், வசந்த் நாயக்கை கொலை செய்ய ஆள் ஏற்பாடு செய்து கொடுத்தவர். போலீசார் நடத்திய விசாரணையில், கமலாகர் பட்டுடன் மட்டுமின்றி, நிறைய வாலிபர்களுடன் சுசித்ரா தொடர்பில் இருந்துள்ளார். வாலிபர்களை ஏமாற்றி சுரேகா என்ற தனது பெயரை சுசித்ரா என்று மாற்றியதும், கலபுரகியை சேர்ந்த வாலிபருடன் மூன்று ஆண்டுகள் திருமணம் செய்யாமல் ஒன்றாக வாழ்ந்ததும் தெரியவந்துள்ளது. இந்நிலையில், சுசித்ராவின் கணவர் மகேஷ் நேற்று கூறுகையில், ''சுசித்ராவுக்கு நிறைய ஆண்களுடன் தொடர்பு இருந்ததால், எனக்கும், அவளுக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டது. ' 'கமலாகர் பட்டை ஆபாசமாக வீடியோ எடுத்து, ஹனிடிராப் மூலம் மிரட்டித்தான், சுசித்ரா தனது வலையில் விழ வைத்தார். அவரிடம் இருந்து வாகனங்கள், நகை, பணத்தை பறித்து உள்ளார்,'' என்றார்.