ரூ.5,000க்காக பாடகர் கொலை கரும்பு தோட்ட முதலாளி ஆவேசம்
பெலகாவி : வெறும் 5,000 ரூபாய்க்காக, இளம் பாடகரை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பெலகாவி மாவட்டம், ராய்பாக் தாலுகாவின், பூதிஹாளா கிராமத்தில் வசித்தவர் மாருதி அடிவெப்பா லட்டே, 22. கிராமிய பாடகரான இவர் சொந்தமாக யு டியூப் சேனல் நடத்தினார். தானே பாடல் எழுதி, மெட்டமைத்து பாடும் திறன் கொண்டவர்.சமீப நாட்களாக இவரது பாடல்கள் பிரபலமடைந்தன. இவர் இதற்கு முன், ஈரப்பா அக்கிவாடே தோட்டத்தில் கரும்பு வெட்டும் பணி செய்தார். இம்முறையும் கரும்பு வெட்ட வருவதாக கூறி, 50,000 ரூபாய் முன் பணம் பெற்றிருந்தார்.இதற்கிடையே, அவரது பாடல் பிரபலமடைந்து, பலரும் இசை நிகழ்ச்சிக்கு அழைக்க துவங்கினர். எனவே கரும்பு வெட்டும் பணியை விட்டு விட்டு, இசை நிகழ்ச்சிகளில் ஆர்வம் காட்டினார். இது ஈரப்பா அக்கிவாடேவுக்கு பிடிக்கவில்லை. வாங்கிய கடனை திருப்பித் தரும்படி கேட்டார். மாருதியும் 45,000 ரூபாயை திருப்பி கொடுத்துவிட்டார். மிச்சமுள்ள 5,000 ரூபாயை தரவில்லை.இதனால் கோபமடைந்த ஈரப்பா, ஐந்து நாட்களுக்கு முன், பூதிஹாளா அருகில் மாருதி, தன் நண்பருடன் பைக்கில் செல்லும் போது, அடியாட்களுடன் காரில் சென்று வழிமறித்து மாருதியை வெட்டி கொலை செய்தார். அவரது உடலின் மீது காரை ஏற்றிவிட்டு தப்பியோடினார்.வேகமாக சென்ற கார், கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இதில் ஈரப்பா காயமடைந்து, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மாருதி கொலை தொடர்பாக, சித்தராமா வடயார், ஆகாஷ் பூஜாரி ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். மற்றவர்களை ராய்பாக் போலீசார் தேடி வருகின்றனர்.