| ADDED : டிச 05, 2025 08:57 AM
பெங்களூரு: பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள, பயங்கரவாதி ஷகீல் மன்னா, 'ஷவர்மா' விற்றது தெரியவந்து உள்ளது. பயங்கரவாத அமைப்புக்கு ஆள் சேர்த்த வழக்கில் கைதான பயங்கரவாதி ஷகீல் மன்னா, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இவர், மொபைல் போன் பயன்படுத்தும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. சிறையின் தலைமை கண்காணிப்பாளர் சுரேஷ் இடமாற்றம் செய்யப்பட்டு, எஸ்.பி., அன்சு குமார் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டார். இவர் நடத்திய விசாரணையில், சிறைக்குள் வைத்தே ஷகீல் மன்னா ஷவர்மா தயாரித்து விற்பனை செய்தது தெரிந்தது. சிறை ஊழியர்கள் மூலம் வெளியில் இருந்து இறைச்சி வாங்கி வந்து, ஷவர்மா தயாரித்து சக கைதிகளுக்கு கூடுதல் விலைக்கு விற்று உள்ளார். இதில் கிடைத்த பணத்தில் ஒரு பங்கை, சிறை ஊழியர்களுக்கு கொடுத்ததும் தெரியவந்து உள்ளது. இந்நிலையில் மொபைல் போன் பயன்படுத்தியது தொடர்பாக, ஷகீல் மன்னாவிடம் சிறையில், என்.ஐ.ஏ., அதிகாரிகள் நேற்று விசாரணை நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.