டிக்கெட் இயந்திரங்கள் மக்கர் அல்லல்படும் நடத்துநர்கள்
பெங்களூரு: பி.எம்.டி.சி., பஸ்களில் பயணியருக்கு வழங்கப்படும் டிக்கெட் இயந்திரங்கள் சரியாக வேலை செய்யாததால், நடத்துநர்கள் சிரமப்படுகின்றனர்.கர்நாடகாவில், 'சக்தி' திட்டம் அமல்படுத்தப்பட்டது முதல், பஸ்சில் பெண்கள் அதிகளவில் பயணிக்கின்றனர். இவர்களுக்கு 'ஜீரோ' டிக்கெட் வழங்குவதற்காக, அனைத்து பி.எம்.டி.சி., ஓட்டுநர்களுக்கும் 'டிக்கெட் இயந்திரம்' வழங்கப்பட்டு உள்ளது. ஆனாலும் நடத்துநர்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.இந்த இயந்திரங்கள் ஆரம்பத்தில் சரியாக செயல்பட்டன. ஆனால் நாளடைவில், 'மக்கர்' செய்ய துவங்கின. இதனால் உரிய நேரத்தில், பெண் பயணியருக்கு டிக்கெட் வழங்க முடிவதில்லை. பின்னர் தருவதாக நடத்துநர்கள் தெரிவிக்கின்றனர்.இந்நேரத்தில், திடீரென பஸ்சில் ஏறும் டிக்கெட் பரிசோதகர், பெண் பயணியிடம் டிக்கெட் கேட்கின்றனர். அவர்கள் இல்லை என்று கூறினால், அபராதம் விதிக்கின்றனர்.அதற்கு பயணியர், 'நடத்துநர் தங்களுக்கு டிக்கெட் தரவில்லை' என்று கூறினால், நடத்துநர்களுக்கு பரிசோதகர்கள் நோட்டீஸ் அளிக்கின்றனர்.'டிக்கெட் இயந்திரம் சரியாக வேலை செய்வதில்லை. டிக்கெட் அச்சிடும் காகிதம் தரமானதாக இல்லை. பேட்டரிகள் பழுதாகிவிடுகிறது. 'சார்ஜ் செய்தால், நீண்ட நேரம் சார்ஜ் இருப்பதில்லை அல்லது சார்ஜ் ஏறுவதில்லை. எனவே டிக்கெட் வழங்க தாமதமாகிறது என்று புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை' என்று நடத்துநர்கள் புலம்புகின்றனர்.பழைய டிக்கெட் இயந்திரத்தை மாற்றி விட்டு, புதிய டிக்கெட் இயந்திரம், வழங்குமாறு நடத்துநர்கள் கேட்டுள்ளனர். இவை என்று கிடைக்கும் என்பதை பொருத்திருந்து பார்க்க வேண்டும்.பயணியருக்கு இயந்திரம் மூலம் டிக்கெட் வழங்கும் நடத்துநர். கோப்பு படம்.