போக்குவரத்துக்கழக ஊழியர் போராட்டம் நடத்த முடிவு
பெங்களூரு: கோரிக்கைகளை வலியுறுத்தி கர்நாடக போக்குவரத்துக்கழக ஊழியர்கள் போராட்டம் நடத்த தயாராகின்றனர். இதுகுறித்து, கர்நாடக சாலை போக்குவரத்துக் கழகங்களின் ஊழியர்கள் சங்கத்தலைவர் அனந்த சுப்பராவ் கூறியதாவது: போக்குவரத்துக்கழக ஊழியர்களுக்கு, 2024 ஜனவரி 1ம் தேதியிலிருந்து, அமலுக்கு வரும் வகையில், ஊதியத்தை உயர்த்த வேண்டும். ஊழியர்களின் 39 மாதங்கள் ஊதிய பாக்கியை உடனடியாக வழங்க வேண்டும். எங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் பெங்களூரு, ஹூப்பள்ளி, கலபுரகி நகரங்களில் அக்டோபர் 15ல், ஐந்து நாட்கள் உண்ணாவிரத போராட்டத்தை துவக்குவோம். நாங்கள் நடத்திய இரண்டு போராட்டங்களுக்கு, பெரும்பாலான போக்குவரத்துக்கழக ஊழியர்களிடம் ஆதரவு கிடைத்தது. நாங்கள் அரசுக்கு ஆகஸ்ட் 11 மற்றும் 15ல், கடிதம் எழுதி வேண்டுகோள் விடுத்தோம். ஆனால் அரசு பதில் அளிக்கவில்லை. எங்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும். இல்லாவிட்டால் கடுமையான போராட்டம் நடத்துவோம். ஒவ்வொரு முறை போராட்டம் நடத்தும்போது, எங்களின் மனதை கரைத்து, கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதி அளிக்கின்றனர். இதுவரை கோரிக்கை நிறைவேறவில்லை. இது தொழிலாளர்களுக்கு எதிரான மனப்போக்கு. இவ்வாறு அவர் கூறினார்.