சூட்கேசில் சிறுமியின் உடல் ரயிலில் இருந்து வீசப்பட்டதா?
பெங்களூரு: பெங்களூரு அருகே ரயில்வே பாலம் அருகில், சூட்கேசில் சிறுமியின் உடல் கிடந்தது, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.பெங்களூரு ரூரல் மாவட்டம், சந்தாபுராவில் ஓசூர் பிரதான சாலையை ஒட்டியுள்ள ரயில்வே பாலம் அருகில், நேற்று காலை பெரிய சூட்கேஸ் ஒன்று கிடந்தது. அவ்வழியாக சென்ற சிலர், சந்தேகம் அடைந்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.அங்கு வந்த சூர்யா நகர் போலீசார், சூட்கேசை திறந்து பார்த்த போது, அடையாளம் தெரியாத 10 வயது சிறுமியின் உடல் இருப்பது தெரிந்தது. வேறு எங்கோ சிறுமியை கொன்று, உடலை சூட்கேசில் அடைத்து, ரயிலில் எடுத்து வந்திருக்கலாம். ரயில், பாலத்தை கடந்து சென்ற போது, அங்கிருந்து சூட்கேசை கீழே வீசியிருக்கலாம் என, போலீசார் சந்தேகிக்கின்றனர்.சூர்யா நகர் போலீஸ் மற்றும் ரயில்வே போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவாகியுள்ளது. போலீசார் சுற்றுப்பகுதி மக்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். கண்காணிப்பு கேமராக்களையும் ஆய்வு செய்கின்றனர்.