2,400 நாய்களை விஷம் வைத்து கொன்றோம் ம.ஜ.த. - எம்.எல்.சி., பேச்சால் பரபரப்பு
பெங்களூரு: ''நாங்கள் 2,400 நாய்களுக்கு விஷம் வைத்துக் கொன்றோம்,'' என, ம.ஜ.த., - எம்.எல்.சி., போஜே கவுடா கூறினார். மேல்சபையில் நேற்று நடந்த விவாதம்: ம.ஜ.த., - போஜே கவுடா: சிக்கமகளூரு மாவட்டத்தில் தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதற்கு தகுந்த தீர்வு எடுக்க வேண்டும். அமைச்சர் ரஹீம் கான்: தெரு நாய்களுக்கு தடுப்பூசி போட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. போஜே கவுடா: தடுப்பூசியால் ரேபிஸ் மட்டுமே தடுக்க முடியும். கடிப்பதை தடுக்க முடியாது. நான் கடிக்கும் நாய்கள் பற்றி பேசுகிறேன். எதிர்க்கட்சி கொறடா - ரவிகுமார்: நாய்களை வெளியேற்ற, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. அமைச்சர் பைரதி சுரேஷ்: அது டில்லிக்கு மட்டுமே பொருந்தும். ரவிகுமார்: அதே உத்தரவை பெங்களூருக்கு பயன்படுத்துங்கள். போஜே கவுடா: நாய்களின் நிலை இப்போது முற்றிலும் மாறிவிட்டது. முந்தைய உத்தரவை மாற்ற உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யுங்கள். பள்ளி குழந்தைகள், சாதாரண மக்களை நாய்களிடம் இருந்து காப்பாற்ற வேண்டும். நான் நகராட்சி தலைவராக இருந்தபோது, 2,400 நாய்களுக்கு, இறைச்சியில் மருந்து தெளித்து கொன்றோம். பின், அவை ஒரு தென்னை மரத்தின் கீழ் புதைக்கப்பட்டன. அமைச்சர் ரஹீம் கான்: உங்களை தேடி விலங்குகள் நல அமைப்பினர் வருவர். போஜே கவுடா: அனைத்து நாய்களையும் பிடித்து, விலங்குகள் நல அமைப்பினர் வீட்டின் முன் விட்டு விடுங்கள். இவ்வாறு விவாதம் நடந்தது.