உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / குழந்தை இல்லாததால் பெண் கொலை உடலை பைக்கில் கட்டி இழுத்த கொடூரம்

குழந்தை இல்லாததால் பெண் கொலை உடலை பைக்கில் கட்டி இழுத்த கொடூரம்

பெலகாவி : குழந்தையில்லை என்பதால், மருமகளை கொடூரமாக கொலை செய்து, விபத்தில் இறந்ததாக கதை கட்டிய கணவர், மாமனார், மாமியார் கைது செய்யப்பட்டனர்.பெலகாவி மாவட்டம், அதானி தாலுகாவின் மலபார் கிராமத்தில் வசிப்பவர் சந்தோஷ் ஹொனகான்டே, 33. இவரது மனைவி ரேணுகா, 27. இவர்களுக்கு திருமணமாகி மூன்று ஆண்டுகளாகியும் குழந்தை பிறக்கவில்லை. இதனால் கணவர் வீட்டில், ரேணுகாவை சித்ரவதை செய்தனர்.சந்தோஷ் குடும்பத்தினர் எதிர்பார்த்த அளவில், வரதட்சணை கொண்டு வராததால், ரேணுகாவை கணவர் வீட்டினர் வெறுத்தனர். இவருக்கு குழந்தையும் பிறக்கவில்லை. எனவே, மருமகளை கொலை செய்ய மாமனார் காமண்ணா ஹொனகான்டே, 60, மாமியார் ஜெயஸ்ரீ, 58, திட்டம் தீட்டினர். இதற்கு மகன் சந்தோஷும் உடந்தையாக இருந்தார்.திட்டமிட்டபடி, மே 17ம் தேதி, இரவு 8:00 மணியளவில், மாமனாரும், மாமியாரும் மருமகள் ரேணுகாவை, பைக்கில் அமர்த்தி கிராமத்தின் அருகில் அழைத்து சென்றனர். ஆள் நடமாட்டம் இல்லாத சாலையில், அவரை கீழே தள்ளினர். இருவரும் சேர்ந்து சேலையால், கழுத்தை நெரித்தனர். மாமியார் ஜெயஸ்ரீ, மருமகளின் தலையில் கல்லை போட்டு, கொலை செய்தார்.பைக்கில் சேலை சிக்கி, ரேணுகா கீழே விழுந்து காயமடைந்து இறந்ததை போன்று தோற்றத்தை ஏற்படுத்த முயற்சித்தனர்.அவரது உடலை பைக்கில் கட்டி, 120 அடி துாரம் வரை இழுத்து சென்றனர். அதன்பின் அதானி போலீசாரை தொடர்பு கொண்டு, மருமகள் விபத்தில் இறந்ததாக அழுது நாடகமாடினர்.இதையடுத்து அங்கு வந்த போலீசார், உடலை மீட்டனர். சம்பவ இடத்தை போலீசார் ஆய்வு செய்தனர். விபத்து நடந்ததற்கான அடையாளம் தெரியவில்லை. பெண்ணின் உடலில் காயங்கள் தென்பட்டன. சந்தேகம் அடைந்த போலீசார், ரேணுகாவின் உடலை மீட்டு பரிசோதனைக்கு அனுப்பினர்.அதன்பின் விசாரணையை துவக்கினர். அவரது கணவர் வீட்டினர் மீது சந்தேகம் எழுந்தது. அவர்களை விசாரித்த போது, மருமகளை கொன்றதை ஒப்பு கொண்டனர். மாமனார் காமண்ணா, மாமியார் ஜெயஸ்ரீ இவர்களுக்கு உடந்தையாக இருந்த கணவர் சந்தோஷை நேற்று போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை