உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / குட்டை பாவாடை அணிந்திருந்த பெண்ணுக்கு பலாத்கார மிரட்டல்

குட்டை பாவாடை அணிந்திருந்த பெண்ணுக்கு பலாத்கார மிரட்டல்

பெங்களூரு: குட்டை பாவாடை அணிந்திருந்த பெண்ணுக்கு, ஆட்டோ டிரைவர் பலாத்கார மிரட்டல் விடுத்த சம்பவம் பெங்களூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரில் வசிக்கும் இளம்பெண் ஒருவர், சமூக வலைதளமான, 'ரெட்டிட்'டில் வெளியிட்ட பதிவு: எனது ஆண் நண்பருடன் இந்திராநகருக்கு மதியம் 3:00 மணிக்கு சென்றிருந்தேன். ஒரு இடத்தில் அமர்ந்திருந்த போது, எங்கள் முன் ஆட்டோ வந்து நின்றது. டிரைவர் திடீரென என்னை பார்த்து, 'எதற்காக குட்டை பாவாடை அணிந்து வந்து இருக்கிறாய்' என்று கத்தினார். எனக்கு ஆதரவாக எனது காதலன் பேசினார். கோபம் அடைந்த டிரைவர், 'இதுபோன்ற ஆடைகளை அணிந்தால், மக்கள் அவளை பலாத்காரம் செய்வர். நானும் அவளை பலாத்காரம் செய்வேன்' என்று கூறினார். இதை கேட்டு நான் அதிர்ச்சி அடைந்தேன். எனது காதலன், அந்த டிரைவரை அவமானப்படுத்தும் வகையில் சைகை செய்ததும், அவர் அங்கிருந்து சென்று விட்டார். பகல் நேரத்திலேயே இப்படி பேசும் நபர்கள், இரவில் பெண்கள் தனியாக இருந்தால் என்னவெல்லாம் பேசுவர் என்று நினைத்தாலே பயமாக இருக்கிறது. அந்த ஆட்டோவில் பயணிக்கும் பெண்ணின் நிலைமை என்ன ஆகும். துரதிர்ஷ்டவசமாக அந்த நபரின் புகைப்படம், ஆட்டோ பதிவெண்ணை புகைப்படம் எடுக்காமல் விட்டுவிட்டேன். இதற்காக வருந்துகிறேன். அந்த நபர் வயதானவர். தலையில் வழுக்கை விழும் நிலையில் இருந்தார். இதுபோன்ற மனிதர்களிடம், பெண்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பதிவிட்டு உள்ளார். இந்த பதிவை பார்ப்போர், ஆட்டோ டிரைவர் மீது போலீசில் புகார் அளிக்கும்படி அப்பெண்ணிற்கு, ஆலோசனை வழங்கி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி