ஆட்டோ ஓட்டுநரை தாக்கிய பெண் போலீசார் முன் ஆஜராகி விளக்கம்
பெல்லந்துார் ஆட்டோ ஓட்டுநரை செருப்பால் அடித்த பெண், நேற்று போலீசாரின் முன்னிலையில் ஆஜராகி, விளக்கம் அளித்தார். ஆட்டோ ஓட்டுநரை தாக்கியதை ஒப்புக்கொண்டார்.பெங்களூரின் தொட்ட சோமனஹள்ளியில் வசிப்பவர் லோகேஷ், 35. ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றுகிறார்.இவர் நேற்று முன் தினம் மதியம், பெல்லந்துாரின் சென்ட்ரல் மால் அருகில், ஆட்டோவை இடது புறம் திருப்பி சென்று கொண்டிருந்தார்.அப்போது வலது புறமாக வந்த இருசக்கர வாகனத்தின் மீது ஆட்டோ உராய்ந்தது.இருசக்கர வாகனத்தில் வந்தவர், கோபமடைந்து லோகேஷை வழிமறித்து தகாத வார்த்தைகளால் திட்டினார்.இரு சக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்திருந்த இளம்பெண், கையாலும், செருப்பாலும் லோகேஷை தாக்கினார். இந்த காட்சிகள் வீடியோ சமூக வலைதளத்தில் பரவியது. இது தொடர்பாக லோகேஷ், பெல்லந்துார் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.போலீசாரும் சமூக வலைதளத்தில் வெளியான தகவலை வைத்து, பெண்ணை கண்டுபிடித்தனர். அவரை நேற்று பெல்லந்துார் போலீஸ் நிலையத்துக்கு வரவழைத்தனர். அவர் பீஹாரை சேர்ந்த பன்வூரி மிஸ்ரா, 28, என்பதும், கணவருடன் பெங்களூரில் வசிப்பதும் தெரிந்தது.கர்ப்பிணியான இவர், மருத்துவமனைக்கு சென்று இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பி கொண்டிருந்தார். பெல்லந்துார் அருகில், அவர் பயணித்த இருசக்கர வாகனம் மீது, ஆட்டோ மோதியது.இது குறித்து கேட்டதற்கு, ஆட்டோ ஓட்டுநர் திட்டி, தாக்க முற்பட்டார். எனவே கோபத்தில் அவரை செருப்பால் அடித்ததை ஒப்புக்கொண்டார். அவரிடம் விபரங்கள் பெற்று கொண்டு, போலீசார் திருப்பி அனுப்பினர்.