6 மாவட்டங்களில் கனமழை மஞ்சள் எச்சரிக்கை அறிவிப்பு
பெங்களூரு: 'கர்நாடகாவில் இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளதால், ஆறு மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது' என வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது. அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளதாவது: மாநிலத்தில் இன்று உடுப்பி, தட்சிண கன்னடா, உத்தர கன்னடா ஆகிய கடலோர மாவட்டங்களிலும்; ஷிவமொக்கா, சிக்கமகளூரு, குடகு ஆகிய மலை மாவட்டங்களில், 6.45 செ.மீ., முதல் 11.54 செ.மீ., வரை கன மழை பெய்ய உள்ளதால், மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. எனவே, இம்மாவட்ட மக்கள், எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். ஆறுகள், ஓடைகள், நீர்தேக்கங்கள், தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும். மீனவர்கள், கடலுக்குள் செல்லும்போது, வானிலை நிலவரங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். பெங்களூரில் இன்று முதல் இரண்டு நாட்களுக்கு மாலை, இரவு நேரங்களில் இடியுடன் அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நகரின் வெப்பநிலை சற்று குறைய வாய்ப்பு உள்ளதோடு, குளிர்ச்சியான வானிலை தொடரும். இவ்வாறு அதில் குறிப்பிட்டு உள்ளது.