உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / காபி ஆற்ற டம்ளர் கொடுக்காத ஊழியரை தாக்கிய வாலிபர் கைது

காபி ஆற்ற டம்ளர் கொடுக்காத ஊழியரை தாக்கிய வாலிபர் கைது

சேஷாத்ரிபுரம்: காபியை ஆற்றுவதற்கு டம்ளர் கொடுக்காததால், தேநீர் கடை ஊழியர் தாக்கப்பட்டார். வாலிபரை போலீசார் கைது செய்தனர்.பெங்களூரு, சேஷாத்ரிபுரத்தில் 'நம்ம பில்டர் காபி' என்ற பெயரில் தேநீர் கடை உள்ளது. நேற்று முன்தினம் மாலை அங்கு சென்ற மூன்று வாலிபர்கள், காபி வாங்கினர். காபியில் சூடு அதிகமாக இருந்ததால், காபியை ஆற்றுவதற்கு டம்ளர் தரும்படி, கடையின் ஊழியர் இஸ்லாமுலிடம் கேட்டனர்.டம்ளர் கொடுக்க மறுத்த அவர், 'இன்னொரு காபி ஆர்டர் செய்து டம்ளரை வாங்கிக் கொள்ளுங்கள்' என கூறி உள்ளார். கோபம் அடைந்த மூன்று வாலிபர்களும், இஸ்லாமுலை தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பினர். இந்த காட்சிகள் கடையில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவானது. இஸ்லாமுல் அளித்த புகாரில் சேஷாத்ரிபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.இஸ்லாமுலை தாக்கிய அருண்குமார், 30, நேற்று கைது செய்யப்பட்டார். அவரது நண்பர்கள் இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !