நிதி பற்றாக்குறை இலக்கில் 38% எட்டப்பட்டது
புதுடில்லி :கடந்த ஆகஸ்ட் மாத நிலவரப்படி, மத்திய அரசின் நிதி பற்றாக்குறை, மொத்த நிதியாண்டுக்கான இலக்கில் 38.10 சதவீதத்தை எட்டியுள்ளதாக சி.ஜி.ஏ., எனும் பொது தணிக்கை கட்டுப்பாட்டாளர் தெரிவித்துள்ளார். இது கடந்த நிதியாண்டின் இதே காலத்தில் 27 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. நடப்பு நிதியாண்டை பொறுத்தவரை மத்திய அரசின் நிதி பற்றாக்குறை 15.69 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.40 சதவீதம் ஆகும். கடந்த ஆகஸ்ட் மாத நிலவரப்படி, அரசின் நிதி பற்றாக்குறை 5.98 லட்சம் கோடி ரூபாயை எட்டியுள்ளது. இது மொத்த இலக்கில் 38.10 சதவீதம் ஆகும். இந்த காலத்தில் அரசின் மொத்த வருவாய் 12.82 லட்சம் கோடி ரூபாயாகவும்; செலவீனம் 18.80 லட்சம் கோடி ரூபாயாகவும் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.