| ADDED : ஜூலை 11, 2024 01:34 AM
புதுடில்லி: கோதுமை மாவு மில்கள் மற்றும் பிஸ்கட் தயாரிப்பாளர்களுக்கு தேவையான கோதுமையை, மாநில இருப்புகளில் இருந்து வழங்க, இந்திய உணவு கழகத்திற்கு, மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. உள்நாட்டில் கோதுமை விலையை கட்டுப்படுத்தும் வகையில், மொத்த நுகர்வோருக்கு விற்பனை செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதனடிப்படையில், இந்திய உணவு கழகம் சார்பில், அடுத்த மாதம் முதல், டன் ஒன்றுக்கு 23,250 ரூபாய் என்ற விலையில், கோதுமையை வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இது நடைமுறையில் உள்ள சந்தை விலையை விட, கிட்டத்தட்ட 12 சதவீதம் குறைவாகும். இந்திய உணவு கழகம், கடந்த ஆண்டு ஜூனில், தனியார் நிறுவனங்களுக்கான கோதுமை விற்பனையை துவக்கியது. கோதுமையின் தற்போதைய விலை, முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில், ஆறு சதவீதம் அதிகரித்துள்ளது. இதையடுத்து, விலைகுறைவாக விற்பதன் வாயிலாக, பல தனியார் நிறுவனங்கள், அதிகளவில் வாங்க ஆர்வம் காட்டுவர் என, கூறப்படுகிறது.