இந்தியாவில் முதலீட்டு திட்டங்களுக்காக 10 ஆண்டில் ரூ.672 லட்சம் கோடி செலவு 77 ஆண்டுகளில் மொத்தம் ரூ.1,176 லட்சம் கோடி
புதுடில்லி:நாடு சுதந்திரம் அடைந்தது முதல் தற்போது வரை, இந்தியாவில் முதலீட்டு திட்டங்களுக்காக 1,176 லட்சம் கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக 'மோதிலால் ஓஸ்வால்' நிறுவனத்தின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதில் பாதிக்கும் அதிகமான முதலீடு, அதாவது 672 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகள், கடந்த 10 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அறிக்கையில் இடம்பெற்ற விபரம் வருமாறு:முதலீட்டு திட்டங்களுக்காக செலவிடப்படும் தொகை அதிகரித்து வருவதால், நாட்டின் பொருளாதார வளர்ச்சியும் அதிகரித்து வருகிறது. சுதந்திரம் அடைந்தது முதல் தற்போது வரை, இந்தியாவில் முதலீட்டு திட்டங்களுக்காக 1,176 லட்சம் கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இதில் கிட்டத்தட்ட 672 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகள், கடந்த 10 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது மொத்த தொகையில் பாதிக்கும் அதிகம். அடுத்த ஐந்து ஆண்டுகளில், இதேபோல மேலும் 672 லட்சம் கோடி ரூபாய் முதலீடு மேற்கொள்ளப்படுவதற்கான வாய்ப்புள்ளது. முதலீடுக்கும் ஜி.டி.பி., விகிதத்துக்கும் இடையிலான விகிதம், கடந்த 2011ம் ஆண்டு முதல் தேக்கமடைந்திருந்த நிலையில், தற்போது மீண்டு வருகிறது. கொரோனாவுக்கு பின் மீண்டுள்ள பொருளாதார நடவடிக்கைகள், உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களுக்கான அரசின் கூடுதல் செலவு ஆகியவை இதற்கு முக்கிய காரணமாகும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.உயரும் சந்தைகள்
இந்திய பங்குச் சந்தைகள், கடந்த 33 ஆண்டு களில் 26 ஆண்டுகள் ஏற்றத்துடனே நிறைவடைந்து உள்ளன. இது நம் நாட்டு சந்தைகளின் மீள்தன்மையை உணர்த்துகிறது. இடையிடையே ஏற்படும் 10 முதல் 20 சதவீதம் வரையிலான சரிவு, ஆண்டுதோறும் நடைபெறும் ஒரு நிகழ்வாக ஆகிவிட்டது. இதனை தவிர்த்து, நீண்ட கால அடிப்படையில் பார்க்கும்போது, பங்குச் சந்தைகள் தொடர்ந்துவளர்ச்சியடைந்தே வருகின்றன.