அனில் அம்பானி வீட்டில் சோதனை நடத்திய சி.பி.ஐ.,
மும்பை:அனில் அம்பானி வீடு, அவரது ரிலையன்ஸ் குழுமம் தொடர்புடைய இடங்களில் 2,000 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்படுத்தியதாக எஸ்.பி.ஐ., அளித்த புகாரில், சி.பி.ஐ., சோதனை நடத்தியது. பொதுத்துறை வங்கியான எஸ்.பி.ஐ., வாங்கிய கடனை திருப்பி செலுத்தாததால், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தை, மோசடி நிறுவனமாக கடந்த ஜூன் 13ல் அறிவித்தது. இதுகுறித்து, கடந்த ஜூன் 24ம் தேதி ஆர்.பி.ஐ.,க்கு எழுத்துப்பூர்வமாக தகவல் தெரிவித்த எஸ்.பி.ஐ., சி.பி.ஐ.,யிடம் புகார் அளித்திருந்தது. இந்நிலையில், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் மற்றும் அதன் இயக்குநரும், தொழிலதிபருமான அனில் அம்பானிக்கு எதிராக வழக்குப்பதிவு செய்த சி.பி.ஐ., அதிகாரிகள், அவர் தொடர்புடைய இடங்களில் சோதனையில் ஈடுபட்டனர். ஏற்கனவே, கிட்டத்தட்ட 17,000 கோடி ரூபாய் வங்கிகளிடம் பெற்ற கடனை, குழுமத்தின் பிற நிறுவனங்களுக்கு மோசடியாக மாற்றியது தொடர்பான வழக்கில், கடந்த 24ம் தேதி அனில் அம்பானி தொடர்புடைய 35க்கும் மேற்பட்ட இடங்களில், அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்திய நிலையில், தற்போது சி.பி.ஐ., சோதனையும் நடைபெற்றுள்ளது.