சமையல் எண்ணெய் நிறுவனங்களில் திடீர் சோதனை நடத்த அரசு திட்டம் உணவு பாதுகாப்பை அதிகரிக்க உறுதி
புதுடில்லி:சமையல் எண்ணெய் நிறுவனங்கள் விதிகளை பின்பற்றுவதை உறுதி செய்ய அவ்வப்போது நேரில் சோதனை செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து மத்திய உணவு துறை அதிகாரிகள் தரப்பில் கூறியதாவது: நாட்டின் உணவு பாதுகாப்பை உறுதி செய்யும் அரசின் நடவடிக்கைகளில் சமையல் எண்ணெய் நிறுவனங்களுக்கு முக்கிய பங்கு இருக்கிறது. அதற்காக, அண்மையில் சமையல் எண்ணெய் உற்பத்தி, சுத்திகரிப்பு, வினியோக நிறுவனங்களுக்கு புதிய விதிகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, இந்நிறுவனங்கள் அரசிடம் கட்டாயம் பதிவு செய்வதுடன், மாதந்தோறும் தரவுகளை சமர்ப்பிக்க வேண்டும். இந்த விதிகளை நிறுவனங்கள் கடைப்பிடிப்பதுடன் நாட்டின் உணவு பாதுகாப்பு நடவடிக்கையில் தங்களை ஒருங்கிணைத்துக் கொள்ள வேண்டும். இதன் வாயிலாக, உணவு துறையின் தேசிய தரவு நடைமுறையில் சமையல் எண்ணெய் குறித்த புள்ளிவிபரங்கள் முழுமையாக சேரும். பதிவு செய்யப்படாத சமையல் எண்ணெய் தயாரிப்பு, விற்பனை, வினியோகத்தை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க இது உதவும். எனவே, தேசிய ஒற்றைச்சாளர முறையில் சமையல் எண்ணெய் நிறுவனங்கள் பதிவு செய்ய வேண்டும். பொதுமக்களின் ஆரோக்கியம் தொடர்புடைய இதை மீறுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.