ஆய்வக வைரம் தயாரிப்பு நடைமுறை ஏற்றுமதிக்கு முன் தெரிவிக்க உத்தரவு
புதுடில்லி:ஆய்வக வைரங்களின் இறக்குமதி அல்லது ஏற்றுமதிக்கு முன்னதாக, அவை தயாரிக்கப்பட்ட நடைமுறை குறித்து தெரிவிப்பதை, மறைமுக வரிக்கான மத்திய வாரியமான சி.பி.ஐ.சி., தெரிவித்துள்ளது.டிசம்பர் 1ம் தேதி அமலுக்கு வரும் இந்த விதியின்கீழ், ஆய்வக மற்றும் மறுகட்டமைக்கப்பட்ட வைரங்களின் தயாரிப்பு குறித்து தகவல் அளித்தால், உடனடியாக அவை பரிசோதித்து சான்றளிக்கப்படும். இதன் வாயிலாக, விரைவாக வைரத்தை வர்த்தகம் செய்யலாம். உலக அளவில் இத்தகைய ஆய்வக வைரங்களின் சந்தை, 2020ல் 8,400 கோடி ரூபாயாக இருந்தது. சந்தையின் மதிப்பு, 2025 வாக்கில், கிட்டத்தட்ட 42,000 கோடி ரூபாயாக அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. வரும், 2035ம் ஆண்டு அது, 1.25 லட்சம் கோடி ரூபாயாக உயரும் என்றும் இத்துறை நிபுணர்கள் தெரிவித்துஉள்ளனர். எனவே, ஆய்வக வைரங்களின் ஏற்றுமதி, இறக்குமதியை முறைப்படுத்தும் வகையில், புதிய விதிகளை மத்திய மறைமுக வரிகள் வாரியம் வெளியிட்டுஉள்ளது. கடந்த, 2018 மற்றும் 2019ம் ஆண்டுகளின் போக்குவரத்து மசோதாவின் படி, ஆய்வக வைர இறக்குமதி அல்லது ஏற்றுமதிக்கான விண்ணப்பத்தில், அதன் உற்பத்தி நடைமுறைகளை தெரிவிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
தலையீடு ஏன்?
ஆபரணக் கற்கள் மற்றும் நகை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சிலின் புள்ளி விபரப்படி, ஆய்வக வைர ஏற்றுமதி, 2021-22ம் நிதியாண்டில் 100 சதவீத வளர்ச்சி கண்டது. 2022-23ம் ஆண்டில் அது, 28 சதவீதம் உயர்ந்த நிலையில், 2023-24ல் முதல்முறையாக ஏற்றுமதி வளர்ச்சியில் சரிவு ஏற்பட்டது. மொத்த ஏற்றுமதி 16.50 சதவீதம் வீழ்ச்சி கண்டது. தொடர் உயர்வின்போது, காரட் மதிப்பில் சமரசம் நடந்ததே ஏற்றுமதி சரியக் காரணமானதால், மத்திய அரசு தற்போது தலையிட்டு, புதிய விதியை அறிவித்துள்ளது.