ஆர்.பி.ஐ., துணை கவர்னராக பூனம் குப்தா நியமனம்
புதுடில்லி:ரிசர்வ் வங்கியின் புதிய துணை கவர்னராக, பூனம் குப்தா நியமனம் செய்யப்பட்டு உள்ளார். கடந்த ஜனவரியில் துணை கவர்னராக இருந்த எம்.டி.பத்ராவின் பதவிக்காலம் முடிவடைந்ததை அடுத்து, அப்பதவி காலியாக இருந்தது. இந்நிலையில், தற்போது பூனம் குப்தாவை துணை கவர்னராக, மத்திய அரசு நியமித்து உள்ளது. அவர் மூன்று ஆண்டுகள் இந்த பொறுப்பை வகிப்பார். கடந்த 2021ம் ஆண்டு முதல் என்.சி.ஏ.இ.ஆர்., எனப்படும் தேசிய பயன்பாட்டு பொருளாதார ஆராய்ச்சி கவுன்சில் இயக்குநராகவும், பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் உறுப்பினராகவும் பூனம் குப்தா பணியாற்றி உள்ளார். முன்னதாக, 20 ஆண்டுகள் உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் ஆகிய அமைப்புகளில், முக்கிய பொறுப்புகளில் பணியாற்றி உள்ளார்.