ரெப்போ வட்டி விகிதத்தை 2வது முறை குறைத்தது ஆர்.பி.ஐ.,
மும்பை:அமெரிக்க அதிபர் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு, நேற்று முதல் அமலுக்கு வந்துள்ள நிலையில், நடப்பு நிதியாண்டுக்கான நாட்டின் பொருளாதார வளர்ச்சி கணிப்பை, ரிசர்வ் வங்கி 6.70 சதவீதத்தில் இருந்து 6.50 சதவீதமாக குறைத்துள்ளது.மும்பையில் நடைபெற்ற ரிசர்வ் வங்கியின் பணக் கொள்கை குழுக் கூட்டத்தின் முடிவில், ரெப்போ வட்டி விகிதம் தொடர்ந்து இரண்டாவது முறையாக கால் சதவீதம் குறைக்கப்படுவதாக வங்கியின் கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா அறிவித்தார்.இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள்: ரெப்போ வட்டி விகிதம் கால் சதவீதம் குறைக்கப்பட்டு 6 சதவீதமாக நிர்ணயம் 2025 - 26ல் நாட்டின் பொருளாதார வளர்ச்சி கணிப்பு 6.50 சதவீதமாக குறைப்பு உணவு பொருட்கள், கச்சா எண்ணெய் விலை குறைவால், பணவீக்க கணிப்பு 4.20 சதவீதத்திலிருந்து 4 சதவீதமாக குறைப்பு விலை ஸ்திரத்தன்மை மற்றும் நிலையான வளர்ச்சியை நோக்கி நாடு தொடர்ந்து பயணம் அமெரிக்க பரஸ்பர வரி விதிப்பு சவால்தான்; ஆனால், இந்தியாவுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது இந்தியாவைப் பொறுத்தவரை, நாட்டின் சரக்கு ஏற்றுமதி பாதிக்கப்பட வாய்ப்புள்ளது புதிய சவால்கள் ஏற்படாவிட்டால், வரும் மாதங்களில் ரெப்போ விகிதம் மாற்றப்படாது (அ) மேலும் குறைக்கப்படலாம் அடுத்த பணக் கொள்கை கூட்டம் வரும் ஜூன் மாதம் 4 முதல் 6ம் தேதி வரை நடைபெறும்.
தங்க நகை கடன்
தங்க நகைக்கடன் வழங்குவதற்கான விதிமுறைகளை கடுமையாக்க முயற்சிக்கவில்லை. வங்கி சாரா நிதி நிறுவனங்கள், வங்கிகளின் தங்க நகைக்கடன் தொடர்பான விதிகளை ஒருங்கிணைக்கவே, விரைவில் புதிய வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட உள்ளன. - சஞ்சய் மல்ஹோத்ராரிசர்வ் வங்கி கவர்னர்
யு.பி.ஐ., உச்ச வரம்பு
வணிகர்களுக்கு மேற்கொள்ளப்பட்டும் யு.பி.ஐ., பரிவர்த்தனைக்கான உச்ச வரம்பை உயர்த்துவது குறித்து, என்.பி.சி.ஐ., எனும் தேசிய பணப் பரிவர்த்தனை கழகம் முடிவு செய்து கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. மாறி வரும் பயனர்களின் தேவையை கருத்தில் கொண்டு, வங்கிகள் மற்றும் சம்பந்தப்பட்ட அமைப்புகளுடன் கலந்தாலோசித்து முடிவெடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தற்போது நாள் ஒன்றுக்கு 5 லட்சம் ரூபாய் மட்டுமே வணிகர்களுக்கு அனுப்ப முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும், தனி நபர் யு.பி.ஐ., பரிவர்த்தனைக்கான உச்ச வரம்பு 1 லட்சம் ரூபாயாகவே தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.